ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன், வடக்கு லண்டனில் மெய்ட்லாண்ட் பார்க் வீதியில் 1-ம் இலக்கமிட்ட வீட்டிலிருந்த படிப்பறை. அதில் படிப்பதற்காகவும் எழுதுவதற்காகவும் மூன்றடிக்கு இரண்டடி மேசை; எழுதுவதற்குத் தேவையான தரவுகளான நூல்களும் ஏடுகளும் தாறுமாறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இன்னொரு சிறிய மேசை. அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்ள பழைய சோபா. கடனுக்கு வாங்கியவற்றுக்குக் காசைக் கொடு என்று மளிகைக்கடைக்காரர்களும் இறைச்சிக் கடைக்காரர்களும் மிரட்டிக்கொண்டிருந்த நாள்கள். இரவும் பகலுமாய்ப் படிக்கவும் எழுதவும் செய்ததால் புட்டத்தில் ஏற்பட்ட கொப்புளங்கள். “இந்தக் கொப்புளங்கள் பூர்ஷ்வா வர்க்கத்துக்குரியதாகுக” என ‘சாபம்’ கொடுத்துவிடுகிறார் ஒரு மனிதர்.
பின்னாளில் உலகைப் புரட்டிப்போட்ட புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த கார்ல் மார்க்ஸ்தான் அந்த மனிதர். அந்த நூலின் கையெழுத்துப் படியைப் பதிப்பாளர்களிடம் தருவதற்கான காலக்கெடு 1856-லேயே முடிவடைந்துவிட்டது. அப்போது மார்க்ஸ் சமாதானம் சொன்னார்: “இந்த நூலின் பொருள், பாணி ஆகிய இரண்டையும் மீண்டும் ஒருமுறை திருத்தி எழுதாமல், இதை வெளியிடக் கூடாது. இடைவிடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளனால், ஆறு மாதங்களுக்கு முன் எழுதியதைச் சொல்லுக்குச் சொல் அப்படியே ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியிட முடியாது.” 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை அவர் முடிக்கப் போவதாகத் தெரியவில்லை: “குறிப்பிட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிக்கப் பல ஆண்டுகளைச் செலவிட்ட பிறகு, அவற்றில் புதிய கூறுகள் தென்படத் தொடங்குகின்றன. எனவே, அவற்றைப் பற்றி மேலும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.”
Click the link above to read the full article on the original website.

