குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அபூர்வமாக கடந்த 24ம் தேதி கானமயில் குஞ்சு (Bustard chick) ஒன்று பிறந்திருந்தது. மிகவும் அபூர்வமான அழிந்து வரும் உயிரினமாக அது கருதப்படுவதால் அந்தக் குஞ்சைப் பாதுகாக்க குஜராத் வனத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
அந்தக் குஞ்சு பாதுகாக்கப்படும் இடத்தில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கப்பட்டது. வி.ஐ.பிக்களுக்குக் கொடுப்பது போன்று இசட் பிளஸ் பிரிவுப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு 50 பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் அந்தக் குஞ்சைப் பாதுகாத்து வந்தனர். அதோடு அந்த இடத்திற்குச் செல்லும் ரோடு கூட தடை செய்யப்பட்டது.
இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் அந்தக் குஞ்சு திடீரெனக் காணாமல் போய்விட்டது. இது குஜராத் வனத்துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பு கொடுத்தும் குஞ்சு எங்கு சென்றது என்பது மர்மமாக இருக்கிறது. வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் முழு அளவில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

குஜராத்தில் தற்போது 3 கானமயில் பெண் பறவைகள் மட்டுமே உள்ளன. ஆண் பறவைகள் இல்லை. எனவே, ராஜஸ்தானில் இருந்து ஒரு முட்டையை எடுத்து வந்து இங்குள்ள கூட்டில் வைத்து குஞ்சு பொரிக்கச் செய்யும் ‘ஜம்ப்ஸ்டார்ட்’ (Jumpstart) முறையில் இது பிறந்தது.
கடந்த 2018ம் ஆண்டு இருந்த ஒரே ஆண் பறவையும் காணாமல் போய்விட்டது. அதுவும் அதன் பிறகு கிடைக்கவே இல்லை.
இவ்வளவு பாதுகாப்பு கொடுத்தும் குஞ்சு காணாமல் போனது குஜராத் வனத்துறையின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது. குஞ்சு பொரித்த பிறகுதான் அதனைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட வேலி அமைப்பில் இருந்த இடைவெளி வழியாக குஞ்சுவெளியில் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இப்போது, அந்தக் குஞ்சு பற்றிய எந்தத் தடயமும் இல்லாததால், அது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை மங்கி வருகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.