கிருஷ்ணகிரி: குடிநீர்த் தொட்டி, குழாய்களை திமுக பிரமுகர் உடைத்ததாகப் புகாரளித்த CPM நிர்வாகி கைது

கிராமக் குடிநீர்த் தொட்டி, குழாய்களை உடைத்ததாக திமுக பிரமுகர் மீது புகார் கொடுத்த இந்திய ஜனநயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரி செய்யப்படும் குடிநீர் தொட்டி
சரி செய்யப்படும் குடிநீர் தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கே.எட்டிப்பட்டி ஊராட்சியிலுள்ள திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் இளவரசன். வழக்கறிஞரான இவர், இந்திய ஜனநயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளராக உள்ளார். கே.எட்டிப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் சசிகலாவின் கணவரான பெருமாள், திமுக பிரமுகராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் திடீர்குப்பத்துக்கு வந்த பெருமாளின் ஆதரவாளர்கள், இளவரசன் வீட்டருகே இருந்த குடிநீர் குழாயை உடைத்துள்ளனர்.

தொடர்ந்து, ‘இப்பகுதியில் உள்ளவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை, அதனால் உங்களுக்கு எதற்கு குடிநீர்?’ என்று கூறியபடி அங்கிருந்த ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிண்டெக்ஸ் தொட்டியை உடைத்தும், மேல் நிலைத் தொட்டியிலிருந்து தண்ணீர் வரும் பைப் லைனையும் உடைத்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பெருமாள் தரப்பினர் மீது சாமல்பட்டி காவல் நிலையத்தில் இளவரசன் புகார் அளித்தார். அதேபோல தங்கள் ஊரிலுள்ள குடிநீர்க் குழாய்களை உடைத்ததாக பெருமாள் தரப்பில் கரடிக்கவுண்டனூரைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவரும் இளவரசன் மீது புகார் அளித்தார்.

கைது செயப்பட்ட சிபிஎம் நிர்வாகி
கைது செயப்பட்ட சிபிஎம் நிர்வாகி

இதையடுத்து மத்தூர் பி.டி.ஓ சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். குடிநீர்க் குழாய்கள் சரி செய்யப்பட்டது. பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாக கே.எட்டிப்பட்டி ஊராட்சிச் செயலாளர் அளித்த புகாரின் பேரில் சாமல்பட்டி காவல்துறையினர் இளவரசன், ஜெயவேல் ஆகியோர் மீதும், பெருமாள் தரப்பில் அரசு, ஜெயசங்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திமுக பிரமுகர் பெருமாள் மீது புகார் அளித்த இந்திய ஜனநயக மாவட்டச் செயலாளர் இளவரசனை இன்று காலை 5 மணிக்கு ஊத்தங்கரை காவலர்கள் கைது செய்தனர்.

‘இது அராஜகச் செயல், உடனே இளவரசனை விடுவிக்க வேண்டும்’ என்று கிருஷ்ணகிரி மாவட்ட சிபிஎம் கட்சியினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Wayanad: New homes for 51 families; housewarming ceremony held with communal harmony!

Pudukkottai: 140-year-old courthouse restored according to traditional methods! | Photo Album