“குடும்பத்தைச் சின்னாபின்னமாக்கியவர் சௌமியா…”
“பா.ம.க-வை 1989-ம் ஆண்டு நான் தொடங்கினேன். இந்தக் கட்சியைக் கைப்பற்றி விட வேண்டும், அபகரித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அன்புமணிக்கு இருந்தது. ஒருமுறை நாங்கள் டெல்லிக்கு விமானத்தில் சென்றபோது, கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னிடம் சொன்னார் அன்புமணி. அப்போது எனது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
அன்புமணி எண்ணற்ற பொய்களைப் பேசுகிறார். அன்புமணி ஒரு பொய்யர். பொய் பேசுவதில் வல்லவர். யோசிக்காமலும், வாய் கூசாமலும் பொய்களைப் பேசுவார். அவரது குடும்பத்தினரையும் அப்படியே பழக்கி வைத்திருக்கிறார். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அப்படி இருந்த குடும்பத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கிய பெருமை அன்புமணியின் மனைவி சௌமியாவைச் சேரும்.

இன்றும் பணத்தைக் கொடுத்து பொய்யர்கள் கூட்டத்திற்கு ஒவ்வொருவராக அழைத்துச் செல்லும் கேவலமான செயலை அவர் செய்து வருகிறார். என்னை குலதெய்வம், கடவுள் என்று சொல்லி பாசமாக இருந்த கட்சியின் முன்னோடிகளையும், தோழர்களையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார்.
இரண்டு முறை நான் மருத்துவமனையில் இருந்தபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். நான் நலம் பெற வேண்டுமென வேண்டினார்கள். ஆனால் பொய்யர் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் என்னை வந்து பார்க்கவில்லை.
போனில் கூட பேசவில்லை. மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டுத்தான் இப்போது உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கு இந்தப் பொய்யர்… பொய்யர் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் (அன்புமணியைக் குறிப்பிடுகிறார்).
“என் பேத்திகளும் நன்றாக நடிப்பார்கள், பொய் பேசுவார்கள்…”
மருத்துவமனையில் என்னைப் பார்க்கவிடாமல் செய்துவிட்டார்களாம். அந்தப் பொய்யர்கள்தான், பச்சோந்திகள்தான் தற்போது என்னைப் பற்றியும், ஜி.கே.மணி அவர்களைப் பற்றியும் பேசுகிறார்கள். அன்புமணியின் குடும்பத்தினர் நடிப்புத் திறமையிலும், கூசாமல் பொய் பேசுவதிலும் திறன் மிக்கவர்கள்.
மூட்டை மூட்டையாக அன்புமணி பொய்யை அவிழ்த்து விடுகிறார். அவர்கள் கண்களில் கிளிசரின் வைத்து அழுது நடிப்பார்கள். எனது பேத்திகள் அழுவதைப் பார்த்து அனைவரும் என்னைச் குறை சொல்வார்கள்.
ஆனால் அது உண்மை கிடையாது. என் பேத்திகளும் நன்றாக நடிப்பார்கள், பொய் பேசுவார்கள். பொதுமக்களிடம் என்னை தவறாகச் சித்தரித்து குடும்பமாக நடித்து வருகிறார்கள். பா.ம.க-வை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி, அபகரித்தும் விட்டார்கள்.

அதற்காகக் குறுக்கு வழிகளை எல்லாம் செய்தார்கள். அதைவிட, என் இறப்பு எப்போது வரும் எனக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜி.கே.மணியிடம் இருந்து திட்டமிட்டு கட்சியின் தலைவர் பதவியைப் பெற்றார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்திற்கும் கூட்டணி சின்னத்திற்கும் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்றார்.
அவரையடுத்துப் பேசிய பா.ம.க-வின் செயல் தலைவர் ஸ்ரீகாந்திமதி ராமதாஸ், “கட்சியின் செயல் தலைவராக நான் பேசவில்லை. ராமதாஸின் மகளாகப் பேசுகிறேன்.
அன்புமணிதான் முதல் துரோகி. அப்பாவின் கட்சி, சொத்து என அனைத்தையும் அவர் திருடிவிட்டார். எங்களுக்கு அரசியல் ஆசை இல்லை. மயங்கி விழுந்து மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கும் அப்பாவை இதுவரை அன்புமணி வந்து பார்க்கவில்லை. அக்கா என்று கூட பார்க்காமல் என்னை கேவலமாகப் பேசுகிறார்கள்.
`கிழவனை தலையணை வைத்து அழுத்திக் கொல்லுங்க…’
அன்புமணி செய்ததை நினைத்துதான் அப்பாவின் உடல்நிலை மோசமானது. என் தந்தைக்கு ஏதாவது நடந்து விட்டால் தொலைத்து விடுவேன் என்று அன்புமணி தெரிவிக்கிறார். அந்த வார்த்தையைச் சொல்ல அவருக்குத் தகுதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.
எங்களுக்குத்தான் அது தெரியாமல் போய் விட்டது. கட்சியை யார் எடுத்துச் சென்றுவிடப் போகிறார்கள்? அதுவரை பொறுமையாக இருந்தால்தான் என்ன ? அப்பாவிற்குப் பிறகு அவர் எடுத்து நடத்தலாமே? அதற்குள் ஏன் இவ்வளவு அலைச்சல் ?
தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினைப் போல, அமைதியாக இருந்து கட்சியை ஏற்று நடத்தியிருக்கலாமே? இந்த வயதில் அப்பாவிடம் இருந்து கட்சியைப் பிடுங்கியிருக்கிறார் அன்புமணி. அவருக்கு வேண்டுமென்றால் தனிக் கட்சியை தொடங்கியிருக்கலாமே ? தந்தைக்கு நல்ல மகனாக இல்லாதவர், எப்படி நல்ல தலைவராக இருப்பார் ?” என்றார்.

அவரையடுத்துப் பேசிய ஜி.கே.மணி, “அன்புமணி தன்னுடன் சிலரை வைத்துக் கொண்டு, முகநூலில் ஐயாவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள். குறிப்பாக அவருடன் இருக்கும் சிலர், `இந்தக் கிழவனை கொண்டு வந்து ரோட்ல போடுங்க, கிழவனை தலையணை வைத்து அழுத்திக் கொல்லுங்க. தலை மேல கல்லைப் போட்டுக் கொல்லுங்க’ என்று ஐயா குறித்துப் பேசுகிறார்கள்.
அந்த நபர்கள் கடந்த சில நாள்களாக, `சிலிண்டரைப் பற்ற வைத்து கிழவனைக் கொல்லுங்க’ என்று ஒரு செய்தியைப் பரப்புகிறார்கள். அதையெல்லாம் பார்த்து அன்புமணி சிரிக்கிறார்.
ஆனால் அவரைம், ஐயாவையும் பிரித்தது ஜி.கே.மணிதான் என்று அவருடைய மகள்களை வைத்து சொல்ல சொல்கிறார். யாரால் அப்படி செய்ய முடியும் ? அவர் ஐயாவைப் பார்க்க வந்தால், பார்க்கக் கூடாது என்று எங்களால் சொல்ல முடியுமா? இது எவ்வளவு பெரிய நாடகம்?” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.