தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசியலில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவான தமிழக வெற்றிக் கழகம், நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது.
ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்த பிறகே பதவியேற்பு நடத்தப்படும் என ஆளுநர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
காங்கிரஸின் 5 உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் கூட்டணியின் பலம் 112 ஆக இருக்கிறது.
இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு தவெக ஆதரவு கோரி இருக்கிறது.
இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதல்வராக்க வேண்டும் என்ற முனைப்புடன் திராவிட கட்சிகள் விஜய்க்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக- அதிமுக கூட்டணி இணையுமா? அப்படி இணைந்தால் இரு கட்சிகளுக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்துமா? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், “திமுகவும், அதிமுகவும் இணைவது பின்னடைவைத் தான் ஏற்படுத்தும். ஏன் என்றால் அரசியல் களத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் நேர் எதிரிகள் பதவிக்காக அனுசரித்துப் போவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
அதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. 1989 ஜானகி அம்மையாருக்கு சுமார் 96 எம்எல்ஏக்கள் ஆதரவு நம்பிக்கை தீர்மானத்தில் ஆதரவு தருவதாக சொன்ன காங்கிரஸ், கடைசி நேரத்தில் காலை வாரியது. கலைஞர் வீட்டுக்கு ஆர் எம் வீரப்பன் நேரடியாக சென்று திமுக எம்எல்ஏக்கள் ஆதரவை கேட்டார்.
ஜானகி அம்மையார் தொலைபேசி மூலமாக கேட்டார். ஆனால், கலைஞர் மறுத்துவிட்டார். எனவே திமுக அதிமுக இணைந்து ஆட்சி அமைக்காது என்று நான் கருதுகிறேன்” என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.