புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! – காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்!

புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.  அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடத்தை தற்காலிக ஆளுநர் மாளிகையாக மாற்றி, அங்கு குடும்பத்துடன் குடியேறினார் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு, 24 மணி நேரக் கண்காணிப்பு என அந்த இடமே ஒரு கோட்டை போலக் காட்சியளிக்கும். நேற்று நள்ளிரவு மது போதையில் கடற்கரை சாலையில் நடந்து வந்த இரண்டு இளைஞர்கள், ஆளுநர் மாளிகையின் அழகைப் பார்த்து வியந்திருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல் அதன் சுவரில் ஏறிக் குதித்து ஆளுநர் மாளிகைக்குள் சென்று, அங்கிருந்த அறைகளை திறந்து திறந்து பார்த்திருக்கிறார்கள்.

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்

அனைத்திலும் உயர்தர படுக்கைகளுடன் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல இருந்ததால், உற்சாகமான அவர்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு அந்த படுக்கையில் அயர்ந்து தூங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து வெளியில் சென்றிருக்கிறார். இவர்கள் தூங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் ஆளுநர் மகன் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது பக்கத்து அறையில் கேட்ட பேச்சு சத்தத்தில் எழுந்த அவர், அந்த அறைக் கதவை திறந்து பார்த்திருக்கிறார். அங்கு போதையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை அழைத்து அவர் யாரென்று கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன போலீஸார், அந்த நபரை எழுப்பி விசாரித்திருக்கிறார்கள்.

`ஆளுநருக்கே இதுதான் நிலை என்றால் பொதுமக்களுக்கு ?’

ஆனால் மது போதையில் இருந்த அவரால் சரியாகப் பேச முடியவில்லை. அதனால் அவரை அலேக்காக தூக்கிய போலீஸார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போதையை `தெளிய’ வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை உயரதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை செய்திருக்கின்றனர்.

அப்போது, `நானும் என் ஃபிரண்டும்தான் நைட் அந்த இடத்தைப் பார்த்தோம். ஹோட்டல் மாதிரி இருந்ததால் உள்ளே போய் படுத்து தூங்கிட்டோம். என்னுடன் வந்த என் ஃபிரண்ட் எதோ வாங்கணும்னு மறுபடியும் வெளியில் போனான். உண்மையாகவே நாங்க தூங்கத்தான் போனோம்’ என்று கூலாக கூறியிருக்கிறார் அந்த போதை நபர். 24 மணி நேரமும் உயர் அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பே கேள்விக்குறியான விவகாரம், ஒட்டுமொத்த புதுச்சேரியை அதிர வைத்திருக்கிறது.

நாராயணசாமி

அதையடுத்து ஆளும் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும், காவல்துறையின் தோல்வியே இதற்குக் காரணம் என்று குற்றம் சுமத்தின. குறிப்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, `போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தும், மர்மமான முறையில் ஆளுநர் மாளிகைக்குள் நுழைந்த ஒரு நபர், அங்கிருந்த ஒரு அறையில் படுத்துத் தூங்கியிருக்கிறார்.

ஆளுநரும், அவரது மகனும் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ? ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன ?’ என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதையடுத்து அன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>`Love that heals damage? Two silent sitting MLAs; boiling leopards’ | Eagle Eye</div>

UN: India voted against Iran; Russia and China abstained! – What happened!