மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained

இதுவரை ‘வரி’யைக் காட்டி உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது இன்னொரு அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளார்.

அது ‘ராணுவ நடவடிக்கை வழி’ ஆகும்.

மதுரோ கைது சம்பவம்

கடந்த 3-ம் தேதி…

வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸ். அங்கே பலத்த ராணுவ பாதுகாப்புகளைக் கொண்ட டியான கோட்டை.

நள்ளிரவு (அமெரிக்க நேரப்படி) நேரத்தில், படுக்கையறையில் அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரஸும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

நிக்கோலஸ் மதுரோ
நிக்கோலஸ் மதுரோ

அந்த அறையில் திடுத்திப்பென அமெரிக்க வீரர்கள் நுழைகின்றனர். மதுரோ தப்பிக்க முயல்கிறார். ஆனால், முடியவில்லை. விளைவு, அமெரிக்க வீரர்களால் சிறை பிடிக்கப்படுகிறார்.

நேற்று நியூயார்க்கில் நடந்த நீதிமன்ற வழக்கில், ‘நான் குற்றவாளி அல்ல. நான் கடத்தி வரப்பட்டிருக்கிறேன். நான் தான் வெனிசுலா நாட்டின் அதிபர்’ என்று மதுரோ வாதாடி இருக்கிறார்.

ஆனால், வரும் மார்ச் 17-ம் தேதி அடுத்த விசாரணை நடக்க உள்ளது. அதுவரை அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது நியூயார்க் நீதிமன்றம்.

ஏன் சிறைபிடிப்பு?

போதை மருந்து கடத்தல், ஆள் கடத்தல், கடத்தல் போன்றவைகளுக்காக மதுரோ சிறை பிடிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறுகிறார்.

இதெல்லாம் முக்கிய காரணம் அல்ல… வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளம் தான் மதுரோவின் கைதிற்கு முக்கிய காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுலா. அந்த நாட்டின் அதிபர் தற்போது அமெரிக்காவின் கைகளுக்குச் சென்றுள்ளார். அந்த எண்ணெய் வளத்தை நிச்சயம் அமெரிக்கா பயன்படுத்த முயலும் என்பது தான் அவர்களது கருத்து.

சிறைப்பிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ
சிறைப்பிடிக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ

ட்ரம்பின் எண்ணம்

அதற்கேற்ற மாதிரியே, மதுரோவின் கைதிற்குப் பிறகு, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தலாம் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

தற்போது, ‘வெனிசுலாவில் உடனடியாக தேர்தல் நடத்த முடியாது. அந்த நாட்டிற்கு சில நலன்களைச் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் தேர்தல் நடத்த முடியும்’ என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்த இரண்டை வைத்துமே ட்ரம்பின் எண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

அவருக்கு ஒரு விஷயம் வேண்டும்… அதற்கு இடைஞ்சல் வரும்போது, அவர் எந்த எல்லைக்கும் சென்று தனக்கு வேண்டியதை சாதிக்கிறார். இது மதுரோவின் சிறைபிடிப்புப் பறைசாற்றுகிறது.

பிற நாடுகள்…

வெனிசுலா மாதிரியே வட அமெரிக்காவிற்குக் குடைச்சல் கொடுக்கும் இன்னும் மூன்று தென் அமெரிக்க நாடுகள் கொலம்பியா, மெக்சிகோ, கியூபா.

நேற்று முன்தினம் (ஜனவரி 4), கொலம்பியா மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று ட்ரம்ப் சிக்னல் கொடுத்திருந்தார்.

இதற்கு பதிலடியாக, ‘தேவைப்பட்டால் மீண்டும் ஆயுதம் எடுப்போம்’ என்று கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார்.

அடுத்தது, கியூபா.

“கியூபாவிற்கு இப்போது வருமானம் கிடையாது. அவர்கள் வெனிசுலாவின் எண்ணெயை வைத்து தான் வருமானம் ஈட்டி வந்தார்கள். அதனால், தற்போது கியூபா வீழ தயாராக இருக்கிறது” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

மெக்சிகோவையும் போதைப் பொருள் கடத்தலுக்கு சாடியுள்ளார்.

நீண்ட நாள்களாக குறி வைத்து வரும் கிரீன்லேண்ட் ‘மீண்டும் வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

இந்தியா பக்கம்…

அப்படியே தென் அமெரிக்கா, ஐரோப்பா பக்கம் சுற்றி, ஆசியாவின் இந்தியாவிற்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் ட்ரம்ப்.

அதாவது, ‘இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். பிரதமர் மோடி நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக்க வேண்டியது முக்கியம்.

அவர்கள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், நாம் இந்தியா மீதான வரியை இன்னும் உயர்த்துவோம்’ என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் இவை அத்தனையையுமே மதுரோவின் கைதிற்குப் பின் தெரிவித்துள்ளார். இது ஒரு வகையான பயமுறுத்தல் தான்.

‘நான் என்ன வேண்டுமானால் செய்வேன். அதனால், ஜாக்கிரதை’ என்பது தான் ட்ரம்பின் இந்த எச்சரிகைகளின் டோன்.

உலக நாடுகளுக்கு என்னென்ன பாதிப்புகள்?

ட்ரம்ப் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், உலக நாடுகள் மேலும் பாதிப்புகளைச் சந்திக்கும்.

இப்போதே உலகில் பல நாடுகள் பொருளாதார நிலையற்ற தன்மை, போராட்டம், ஆட்சி மாற்றங்களால் தள்ளாடி வருகின்றனர். இந்த நிலையில், ட்ரம்பின் இந்த எச்சரிகைகள் உலகில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்ததாக, இந்த மிரட்டல்கள், அத்துமீறல்கள் அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறுகின்றது. இது நாடுகளில் பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தும்.

ஏற்கெனவே ரஷ்யா – உக்ரைன் போரிலும், இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரிலும் மத்தியஸ்தம் செய்து வருகிறார் ட்ரம்ப்.

இப்போது இவரே ராணுவ நடவடிக்கையைக் கையிலெடுத்துள்ளதால், இந்த மத்தியஸ்த முயற்சி பின்தங்கலாம்.

சீனா – தைவான் பிரச்னை போன்றவை இருந்து வருகிறது. ட்ரம்பின் செயல் பெரிய நாடுகளுக்கு ஊக்கமளிக்கும்.

மோடி - புதின்
மோடி – புதின்

இந்தியாவை எடுத்துக்கொண்டால், நமக்கு ரஷ்யாவும் முக்கியம்… அமெரிக்காவும் முக்கியம்.

ட்ரம்பின் வரிகளால், ஏற்கெனவே இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துவிட்டது. இன்னும் குறைத்தாலோ, நிறுத்தினாலோ இந்தியா – ரஷ்யா உறவு பாதிக்கப்படும்.

இதுபோக, எண்ணெய் வாங்குவதெல்லாம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதில் இன்னொரு நாட்டை இந்தியா தலையிடவிடாது… தலையிடவிடவும் கூடாது.

ஆக, மொத்தம் ட்ரம்பின் இந்த செய்கைகள் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கு எதிராக செல்கிறது.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Manickam Thakur’s statement is his own opinion; except for DMK…” – Selva Perundagai

They are the foundation of the judiciary; action cannot be taken against judges! – Supreme Court