2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இரண்டாம் முறையாகச் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த என் தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அதேபோல, இந்தக் கடும் போட்டியில் களத்தில் நின்று வெற்றிக்காக உழைத்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நிச்சயம் இந்த முறையும் இந்தத் தொகுதி மக்களுக்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன். என்னால் முடிந்த அனைத்து நற்பணிகளையும் எங்கள் தலைவர் காட்டிய வழியில் தொடர்ந்து செய்வேன். தமிழ்நாட்டு மக்கள் இப்போது ஒரு முடிவைக் கொடுத்திருக்கிறார்கள். மக்களின் அந்தத் தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இந்த நேரத்தில் வெற்றி பெற்றுள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாகப் பொறுப்பேற்க உள்ள புதிய அரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் எங்கள் தலைவர் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை வழங்குவார். அந்த ஆலோசனையின் அடிப்படையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.