திருநெல்வேலி: சுட்டிக்காட்டிய விகடன்; புத்துயிர் பெறும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம்!

திருநெல்வேலி சந்திப்பிற்கு அருகிலிருக்கும் இரட்டை பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்தச் சமுதாய நலக்கூடமானது கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சமுதாய நலக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடந்ததால் இந்த சமுதாய நலக்கூடமானது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து விகடனில் ‘திருநெல்வேலி: மூடிக்கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!‘ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டோம்.

அச்செய்தியில் மக்கள் இந்த சமுதாய நலக்கூடமானது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசௌகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது என்றும், இந்தச் சமுதாய நலக்கூடமானது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் கூறிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அச்செய்தியானது உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. சிறிது நாள்களிலேயே உள்ளே வளர்ந்துகிடக்கும் புதர்கள், முட்செடிகள் போன்றவற்றை சுத்தம் செய்து, சமுதாய நலக்கூடத்தை குறிப்பிட்ட காலத்தில் சீரமைத்து தற்போது வண்ணம் பூசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது,

“இச்செய்தி வெளிவந்திருந்ததை அறிந்தோம். ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தை சீரமைப்பதற்கான வேலைகளையும் அதன் பிறகு உடனே துவங்கிவிட்டோம். பழுதடைந்த சமுதாய நலக்கூடத்திற்கு நிதி ஒதுக்கீட்டிற்காக காத்திருந்தோம். நிதி வந்தவுடன் வேலையைத் தொடங்கிவிட்டோம். விடுதியாக, அலுவலகமாகப் பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்ட இந்தச் சமுதாய நலக்கூடத்தை மறுசீரமைப்பு செய்து வருகின்றனர். பணிகள் நிறைவடைந்த பின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த சமுதாய நலக்கூடமானது பயன்படுத்தப்படும்.” என்று கூறினார்.

சீரமைக்கப்பட்டு வரும் ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இன்னும் சிறிது காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

TVK: Women Ministers in the Tavake Government Cabinet – Who Holds Which Portfolio?