1974ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல் சட்டமன்ற உறுப்பினராக அரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டார்.
அன்று முதல் அ.தி.மு.க. பலம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றாக கோவை மாவட்டம் இருந்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தவிர, மற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வை கோவை கைவிட்டதே இல்லை.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த போதும், கோவை மாவட்டத்தில் பத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் அ.தி.மு.க-வின் கோட்டையாக கோவை கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட த.வெ.க, கிணத்துக்கடவு, சூலூர், கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.
கோவை தெற்கு, வால்பாறை ஆகிய தொகுதிகளில் தி.மு.க-வும், பொள்ளாச்சியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட கொ.ம.தே.க-வும் வெற்றி பெற்றன. ஆனால் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரும் தோல்வியை தழுவியுள்ளனர்.
சூலூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, கோவை வடக்கு ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. இரண்டாம் இடத்திற்கும், மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய 5 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
இது அ.தி.மு.க-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவிய அ.தி.மு.க, 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தலில் படுதோல்வியைப் சந்தித்துள்ளது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.