குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!’ – மக்கள் முன்வைக்கும் `27′ கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல் தேர்தலைச் சந்தித்து வெற்றிபெற்ற தொகுதி. இந்த தொகுதியில் தற்போது தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தொகுதி வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி மக்கள் 27 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து, அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர் பேசுகையில்,

“எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சியில் இருந்து குளித்தலையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் குளித்தலை தொகுதி மக்களின் சார்பாக வாழ்த்துகள். ஆனால், குளித்தலை தொகுதி மக்களின் சார்பாக நிறைவேற்ற வேண்டிய எங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று அவர்களிடம் வலியுறுத்துகிறோம்.

நகராட்சிக்குச் சொந்தமாக புதிய பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும். தற்போது, கோயிலுக்கு சொந்தமான வாடகை இடத்தில சிறிய பரப்பளவில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் இல்லாத ஒரே நகராட்சி இதுதான். அதேபோல், விவசாயம் நடக்கும் பகுதி என்பதால் குளித்தலை, மருதூர், முசிறி, உமையாள்புரம் இடையே இருவழிச் சாலையுடன் கூடிய கதவணை அமைக்க வேண்டும்.

lake

தமிழகத்தில் உள்ள ஏரிகளில் மூன்றாவது பெரிய ஏரியான கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்சப்பட்டி ஏரிக்கு மாயனூரில் இருந்து காவிரி நீர் கொண்டு செல்லுதல், மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குளித்தலை – மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், குளித்தலை பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் சட்டமன்றத் தொகுதியில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த பகுதி மக்கள் பொழுதுபோக்கும் வகையில் குளித்தலை காவிரி கரையில் பூங்கா அமைக்க வேண்டும். அதேபோல், குளித்தலையில் துணை மின் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

kulithalai

மக்களின் நீண்டகால கோரிக்கையான குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும், திருச்சி டு கரூர் சாலையை விபத்து இல்லாமல் இருக்க நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை வேண்டும், கடம்பர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கோயில் சார்பாக திருமண மண்டபம் அமைக்க வேண்டும், தோகைமலையில் பத்திரப்பதிவு அலுவலகம், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட குளித்தலை தொகுதியில் நர்சிங் கல்லூரி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி இல்லாத தொகுதியாக உள்ள எங்கள் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

தவிர, இனுங்கூர் வேளாண் விதைப்பண்ணையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் அமைத்தல், அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில் என்பதால், அதை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கைள், குளித்தலை நகரில் உள்ள கால்நடை மருத்துவ மையத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், குளித்தலை நகரம் மற்றும் வாலந்தூர் கிராமங்களுக்கு இடையே உள்ள ரயில்வே நிலையம் அருகில் லைனில் சப்வே அமைக்க மத்திய அரசை வலியுறுத்த நடவடிக்கை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக துவங்கப்பட்ட குளித்தலை நகரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் MRI ஸ்கேன் வசதி உட்பட அனைத்து வசதிகளுடனும் மற்றும் மருத்துவர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புதல், திருச்சி, கரூர் பகுதிகளுக்கு அனுப்பாமல் நம் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டும்.

bus stand

அதேபோல், குளித்தலை அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் ராமேஸ்வரம், மதுரை கன்னியாகுமரி சென்னை உட்பட பகுதிகளுக்கு தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். திருப்பூர், கோவை நகரங்களில் இருந்து திருச்சி நகருக்கு இயக்கப்படும் ஏசி பேருந்துகள் குளித்தலை பயணிகளை ஏற்றி குளித்தலை பேருந்து நிலையத்தில் இறக்கி விட வேண்டும். தவிர, குளித்தலை நகரில் இருந்து லாலாபேட்டை மாயனூர் வழியாக புதிய காவேரி பாலம் காட்டுப்புத்தூர் மோகனூர் வழியாக நகரப் பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும் மோகனூர் மற்றும் நாமக்கல் பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அதேமாதிரி, குளித்தலை தொகுதியில் உள்ள வெற்றிலை மற்றும் வாழை கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் வாழ்வாதாரங்கள் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் கரூரிலிருந்து இயக்கப்படும் SETC பேருந்துகள் தற்போது சுங்க கேட் வரை வந்து பிறகு முசிறி சென்னை இயக்கப்படுகிறது. பேருந்துகள் குளித்தலை பேருந்து நிலையம் வரை வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பிறகு முசிறி சென்னை வரை இயக்கப்பட வேண்டும். கரூர் திருவள்ளுவர் மைதானம் போன்று குளித்தலை நகர பகுதியில் பொதுமக்களுக்கு நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் குளித்தலை அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்படுத்திடவும் சிறிய அளவில் மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுகிறோம். குளித்தலை நகராட்சி எல்லையை அருகில் உள்ள கிராம ஊராட்சிகளின் மக்களின் எண்ணங்களை உணர்ந்து விரிவுபடுத்திட வேண்டும். குளித்தலை நகரப் பகுதியில் உள்ள தென்கரை பாசன வாய்க்கால்களில் நடை பாலங்கள் உள்ளது.

railway gate

தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப இது பத்தாது. நான்கு சக்கர மற்றும் ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் குளித்தலையில் சண்முகானந்தா தியேட்டர் அருகில் ஒரு பெரிய பாலமும், மலையப்ப நகர் மற்றும் திருச்சி சாலையை இணைக்கக்கூடிய வகையில் பெரிய பாலமும் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இது, காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதேபோல், தென்கரை பாசன வாய்க்கால்களில் பழுது அடைந்த அனைத்து சிறு பாலங்களை பெரிய வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். குளித்தலை வாரச்சந்தைக்கு நிரந்தரமாக கட்டடம் உள்ள ஓர் இடத்தை தேர்வு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தினசரி நகராட்சி காய்கறி மார்க்கெட் அமைத்துக் கொடுக்க வேண்டும். கடைசியாக, குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால், இங்கு செழிப்பாக விவசாயம் நடைபெறும். நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். குளித்தலை சட்டமன்றத் தொகுதி மக்களின் சார்பாக தொகுதி மக்களுக்குத் தேவையான கோரிக்கைகள் இவை. இவற்றை வேட்பாளர்கள் முயற்சிக்க வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வாழ்த்துகள். எங்கள் கோரிக்கைகளை அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

When will the constituency-wise seat-sharing details of the AIADMK-BJP alliance be released? – EPS responds in Delhi

Theni: ‘MLA seat confirmation’ – 15 million rupees fraud from DMK official; police investigation!