தி.மு.க கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க ஆட்சியமைக்க உதவியதோடு, த.வெ.க அமைச்சரவையிலும் இடம்பெற்றனர். இது, தி.மு.க-வினரை கடுமையாக விமரசிக்க வைத்தது. பலரும் சமூக வலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி-யுமான ஆ.ராசா சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள், சர்ச்சைக்கு வித்திட்டது. அவரது கருத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

பெரம்பலூரில் ஆ.ராசாவின் அலுவலகத்தை சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, அதனைத் தடுத்தனர். இந்நிலையில், குன்னம் பேருந்து நிலையத்தில் கடந்த 23 -ம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆ.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.
அதற்கு காவல்துறை முதலில் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கண்டித்து தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட நிலையில், இரு தரப்புக்கும் காவல்துறை அனுமதி தரவில்லை. குன்னம் பேருந்து நிலையத்தில் இன்று ஆ.ராசாவைக் கண்டித்து அந்தப் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைக் கண்டித்து தி.மு.க-வினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால், இரு கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் பிறகு அது மோதலாக மாறியது. இரு தரப்பும் கற்கள், கம்புகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். அதைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள், தி.மு.க-வினருக்கு இடையில் மோதல் வெடித்த சம்பவம், குன்னம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.