“அனுதாப நாடகமா? நான் எளிமையானவன்; ஆனா ஏழை அல்ல.!” – செருப்பு அணியாத தவெக MLA சொல்லும் விளக்கம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.குப்பம் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார் வேட்டி, சட்டை சகிதம் காலில் செருப்புக்கூட அணியாமல் எளிமையான தோற்றத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறார். பதவியேற்பின்போதும், அரசுப் பேருந்தில் சென்ற அவர், `என்னிடம் மகிழுந்து இல்லை. நான் எளிய வீட்டுப் பிள்ளை’ என பேட்டிக்கொடுத்திருந்தார். அதை `தன்னான தானா’ பின்னணி இசை கொடுத்து ஒரு தனியார் செய்தி சேனல் வெளியிட்டது. அது சமூக வலைதளங்களில் படு வைரலாக, `த.வெ.க-வில் ஒரு காமராஜர்’ என விர்ச்சுவல் வாரியர்ஸும் ஷேர் செய்ய, உண்மை என சில விவரங்கள் வெளியாகி எம்.எல்.ஏ தென்றல் குமார் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

சம்பந்தப்பட்ட தென்றல் குமார் மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் கையில் ரூ.17 லட்சம் ரொக்கம், 139 சவரன் தங்க நகைகள், ரூ.2.7 கோடிக்கு அசையும், அசையாச் சொத்துகள் இருப்பதாக அவரின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரம் வெளிப்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில், அவர் ஏழை எம்.எல்.ஏ-வாகக் காட்டிக்கொண்டது ஏன்? என்று விசாரித்தபோது, `அமைச்சர் பதவிக்காகச் செய்த செயல்’ என்று த.வெ.க-வினரே கொதித்து பேசினார்கள்.

த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார்

விமர்சனங்கள் கட்டுக்கடங்காமல் வந்த பிறகும், காலில் செருப்பு அணியாமலே தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் சோகமான பின்னணி இசையுடன்கூடிய வீடியோக்களை பகிர்ந்து வந்தார் தென்றல் குமார். இந்த நிலையில், அவர் எதற்காக இவ்வளவு மெனக்கெட்டதாக தவெகவினரே சொல்கிறார்களோ, அது இன்று நடக்காமல் போய் இருக்கிறது. வேலூர் மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் த.வெ.க நான்கில் வென்றிருக்கிறது.

ஆனாலும், அமைச்சரவையில் வேலூர் மாவட்டத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில், `ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!’ என்பதுபோல ஏமாற்றமடைந்திருக்கும் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ தென்றல் குமாரிடம் `ஏன் செருப்பு அணிவதில்லை? எதற்காக நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டீர்கள்?’ என்று கேள்வியெழுப்பினோம்.

“நான் எளிமையானவன் தான். ஏழை அல்ல. வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் ஒப்பிடுகிறார்கள். ஊருக்கு மரியாதைக் கொடுப்பது எங்கள் வழக்கம். காசு வாங்கும்போதுகூட செருப்பைக் கழற்றிவிட்டுதான் கையில் வாங்கி எண்ணி பாக்கெட்டில் வைப்போம். பெரியவர்களுக்கு வணக்கம் வைக்கும்போதும், செருப்பு காலுடன் வணக்கம் வைக்க மாட்டோம். 500 வீடு இருக்கிறது என்றால், ஆயிரம் முறை செருப்பைக் கழற்றி மாட்ட வேண்டும். அது, சாத்தியமற்றது. வெறுங் காலுடன் நடப்பது சுலபமாக இருப்பதால், காலணி அணியாமல் பயணித்தேன்.

பரப்புரையின்போது, ஊர் ஊராக ரத்தம் சுண்ட சுண்ட நடந்துசென்றேன். இது என்னுடைய பண்பு. அதேபோல, `கார் இல்லை’ என்று சொன்னேன். விமர்சனம் செய்வோர், என்னுடைய பிரமாண பத்திரத்தை திறந்து பார்த்துவிட்டு, `ஆமாங்க. இவருக்குக் கார் இல்லை. 100 சதவிகிதம் இவர் நியாயமாகத்தான் இருக்கிறார். ஆனாலும், இன்னும் பிற சொத்துகள் வைத்திருக்கிறார்’ என்று சொல்லியிருக்க வேண்டும். வ.உ.சி-யும் மூன்று கப்பல்கள் வாங்கும் அளவுக்கு செல்வந்தர். மக்களுக்காக அவர் எளிமையாக வாழ்ந்துவிட்டு போகவில்லையா? முத்துராமலிங்க தேவரும் பெரிய செல்வந்தர் தான். மக்களுக்காக அவர் தவ வாழ்க்கை வாழவில்லையா?

த.வெ.க எம்.எல்.ஏ தென்றல் குமார்

பிரசாரத்தின்போது, நான் பயன்படுத்தியது வாடகை கார். தரமற்ற விமர்சனம், நியாயமற்ற விமர்சனம் செய்கிறார்கள். ரூ.500 கோடி கொடுத்து இன்பநிதி படம் எடுக்கிறார். அவர் எந்த மண்வெட்டி, கடப்பாரைப் பிடித்து வேர்வை சிந்தி அந்தப் பணத்தை சம்பாதித்தார்? தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இதேபோல தான். என் மனைவி பெயரில் நகை இருக்கிறது என்கிறார்கள். அந்த நகை அவரின் தாய் வீட்டில் கொடுத்தது. தினந்தோறும் அந்த நகையை விற்று கஞ்சி குடிக்க வேண்டும் என்கிறார்களா?

நாம் தமிழர் கட்சியில் நான் பயணித்தபோது, லட்சக்கணக்கில் அந்தக் கட்சிக்காக செலவு செய்திருக்கிறேன். த.வெ.க-வில் விருப்ப மனு அளித்தபோதே நாம் தமிழர் கட்சியில் பயணித்ததை குறிப்பிட்டு சொல்லிவிட்டேன். நான் எதையும் மறைக்கவில்லை. என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். வியர்க்காமல் விளையாட முடியாது. விமர்சனங்கள் இல்லாமல் வளர முடியாது. அவதூறு விமர்சனங்கள் என்பது வெறும் சொற்கள்தான். காயப்படுத்தும் கற்கள் அல்ல என்று கடந்துசெல்கிறேன்’’ என்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Congress has entered the cabinet through the backdoor” – Tamilisai Soundararajan’s accusation!

‘This is why the Minister of Tourism is appointing everyone’ – What does Premalatha say?