மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து 179 வாக்காளர்களில், 2 லட்சத்து 42 ஆயிரத்து 379 பேர் வாக்களித்தனர்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் 13 சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அதற்கு அடுத்த சுற்றுகளில் த.வெ.க. சுனில் ஆனந்த் முன்னிலை பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 75 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்ற சுனில் ஆனந்த் 7,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 67,896 வாக்குகளுடன் தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் இரண்டாம் இடத்தையும், 61,736 வாக்குகளுடன் அ.தி.மு.க. வேட்பாளர் ஒ.கே.சின்ராஜ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
தி.மு.க-வில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட டி.ஆர். சண்முகசுந்தரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, தி.மு.க. தோல்விக்கு வழிவகுத்தார்.
இந்தத் தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. 9 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 2 முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
குறிப்பாக கடந்த 5 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட சுனில் ஆனந்த், வெற்றி பெற்று தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுனில் ஆனந்த் (53), 11ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறார். விஜய் ரசிகராகவும், த.வெ.க. தொண்டராகவும் இருந்த இவர், இந்தத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.