2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அதனால், பிற கட்சிகளிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பது குறித்து தமிழ்நாடு இடைகால கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
எனக்கு தேவை…
அதில், “தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எழுதிய கடிதம் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில் தனக்கு 35 சதவீத வாக்குகள் அல்லது அது போன்ற ஒரு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
அவருக்கு நான் கூறியிருக்கும் பதில், “எனக்குத் தேவை உங்களை ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ-க்கள்) எண்ணிக்கைதான்’ என்பதுதான்.
இந்தப் பதிலை அவர் ஏற்றிருக்கிறார்.
தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கிடைக்கிறதா என்பதை அந்தக் கட்சி தான் எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் குறைந்தது 118 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.
இதுதான் ‘வெளியிலிருந்து ஆதரவு’ என்பது. சபைக்கு வெளியே அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் சபைக்குள் அவர்கள் முதலமைச்சருக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனக்கு இது ஒன்றுதான் முக்கியம்.
தவெக ஆட்சி அமைக்க பல வழிமுறைகள் உள்ளன. அவர்கள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என எல்லா வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கால அவகாசம் என்ன?
தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அது அந்தச் சூழலின் அவசரத்தைப் பொறுத்தது. இதுபோன்ற விஷயங்களில் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்கப்படலாம்.
கட்சித் தலைவர் கால அவகாசம் கேட்கலாம் அல்லது ஆளுநரே ‘இந்தக் காலத்திற்குள் உங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ என்று சொல்லலாம்.
அரசியலமைப்பிலோ அல்லது விதிகளிலோ இதற்கெனத் தனியாகக் கால அவகாசம் எதுவும் சொல்லப்படவில்லை”. எனக் குறிப்பிட்டுள்ளார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.