`பொற்கோயில் ஆசியும், போர் யானை முழக்கமும்!’ – வேலூரில் சொல்லி அடித்த தவெக வினோத் கண்ணன்!

வேலூர் தொகுதியில், தி.மு.க சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ ப.கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோரை எதிர்த்து த.வெ.க-வில் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.வினோத் கண்ணன் போட்டியிட்டார். வினோத் கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பேசுபொருளாக இருந்து வந்தார்.

வீடு வீடாகச் சென்று தொகுதியில் நிலவும் பிரச்னைகளை எடுத்துக்கூறியும், த.வெ.க-வுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதால் வரப்போகும் நன்மைகளையும் விளக்கிப் பேசி மக்களைக் கவர்ந்துகொண்டிருந்தார் வினோத் கண்ணன். பிரசாரக் களத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து தனது வெற்றியையும் முன்கூட்டியே கணித்திருந்தார். அதற்கேற்ப, தேர்தல் முடிவும் அமைந்திருக்கிறது.

வினோத் கண்ணன்

வேலூர் தொகுதியில் மொத்தமுள்ள வாக்குகள் 2,14,946. அதில் பதிவான வாக்குகள் 1,89,770. அவற்றில், த.வெ.க வேட்பாளர் வினோத் கண்ணன் பெற்றது 73,032 வாக்குகள். தி.மு.க வேட்பாளர் கார்த்திகேயன் 66,255 வாக்குகளுடன் இரண்டாம் இடம், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 45,458 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். முடிவாக 6,777 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்திகேயனை வீழ்த்தி வெற்றி பெற்றார் வினோத் கண்ணன்.

வேலூர் எம்.எல்.ஏ-வாக வலம் வரப்போகும் வினோத் கண்ணன் சாதாரண குடும்பப் பின்னணிகொண்டவர்தான். வேலூரில், `ஸ்ரீ மெமன்டோஸ்’ என்கிற பெயரில், விருது கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் விற்பனையகம் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு மனக்கணக்குப் பயிற்சி அளிக்கும் `அலமா அபாகஸ்’ கல்வி நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வணிக நிர்வாகம் சார்ந்த பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்புப் படித்திருக்கும் வினோத் கண்ணனுக்கு எழிலரசி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

வேலூர் ஸ்ரீபுரத்தில் பொற்கோயிலுடன்கூடிய நாராயணி பீடத்தை நிறுவிய மடாதிபதி சக்தி அம்மாவின் ஆசி, அரவணைப்பும் வினோத் கண்ணனுக்கு இருக்கிறது. நேற்றைய தினம் வெற்றி வாகை சூடிய கையோடு நேராக பொற்கோயிலுக்குச் சென்று சக்தி அம்மாவிடம்தான் ஆசி பெற்றார் வினோத் கண்ணன்.

விஜய்யுடன் வினோத் கண்ணன்

அதுமட்டுமல்லாமல், பிப்ரவரி 23-ம் தேதி வேலூர் அகரம்சேரி பகுதிக்கு விஜய்யை அழைத்து வந்து த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையும் பிரமாண்டமாக நடத்தியதும் வினோத் கண்ணன் தான். அந்தக் கூட்டத்தில் விஜய்க்கு வெள்ளியால் செய்யப்பட்ட இரட்டை போர் யானைகள் மற்றும் பிரசித்திபெற்ற பொற்கோயில் காட்சி மாதிரியையும் பரிசாக வழங்கினார்.

போர் யானை பரிசுப் பொருளில் `வினோத் கண்ணன் – வேலூர் சட்டமன்றத் தொகுதி’ என பொறிக்கப்பட்டிருந்தது. பரிசுப்பொருள்களை விஜய் கையில் வாங்கியபோது, `இது வெள்ளி போர் யானை மட்டுமல்ல, வேலூரின் வெற்றி யானை’ எனவும் முழங்கினர் த.வெ.க-வினர். அதன்படி, சொல்லி அடித்திருக்கிறார் வினோத் கண்ணன்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Raghupathi, Vanni Government to Vijayabaskar – List of winners with a narrow vote margin!

VCK – Leftists’ sudden consultation: ‘Support for Tavega? What is the decision?’ – CBI Veerapandian interview!