அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை நாடு திரும்புமாறு இந்திய தொழிலதிபர் ஶ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது…
“அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு திறந்த மடல்.
பாரதத்தைச் சேர்ந்த என் அன்பு சகோதர சகோதரிகளே:
சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி சென்றேனோ, அதேபோல்தான் நீங்களும் கையில் பணமில்லாமல், ஆனால் பாரதத்தின் சிறந்த கல்வியையும் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் சுமந்து அமெரிக்காவிற்கு சென்றிருப்பீர்கள்.

இன்று மிகச்சிறந்த வெற்றிகளைக் குவித்திருக்கிறீர்கள். அமெரிக்கா நமக்கு நல்ல வாழ்வை அளித்துள்ளது, அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்—ஏனெனில் ‘நன்றி மறவாமை’ என்பது நமது பாரதப் பண்பாடு.
இருந்தாலும் இன்று ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள், இந்தியர்கள் அமெரிக்க வேலைவாய்ப்புகளை ‘பறித்துக் கொள்கிறார்கள்’ என்றும், நமக்கு வெற்றி நியாயமற்ற முறையில் கிடைத்தது என்றும் நம்புகிறார்கள்.
அடுத்த தேர்தல் இதை மாற்றும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் முன்னால் உள்ள தேர்வுகள் இரண்டுதான்: ஒன்று, நமது பாரத நாகரிகத்தையே வெறுப்பவர்கள்; மற்றொன்று, நாகரிகம் என்ற கட்டமைப்பையே வெறுப்பவர்கள்.
இது ‘தீவிர வலதுசாரி’ மற்றும் ‘அதிதீவிர இடதுசாரி’ (Woke left) ஆகியவற்றுக்கு இடையேயான போர். இதில் நீங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

இன்னொரு பக்கம், இப்போதும் எப்போதும் மாறாத ஒரு உண்மை இருக்கிறது: உலக அரங்கில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் மரியாதை, இந்தியாவின் வளர்ச்சியையும் வளத்தையும் பொறுத்தே அமையும்.
இந்தியா ஏழ்மையிலேயே நீடித்தால், இடதுசாரிகள் நம்மிடம் பரிதாபப்பட்டு ‘நீதிப் போதனைகள்’ செய்வார்கள்; வலதுசாரிகளோ நம்மை ஏளனமாகப் பார்த்து ‘வெறுப்புப் போதனைகள்’ செய்வார்கள். இவை இரண்டையும் ‘மரியாதை’ என்று நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.
இன்றைய உலகில் மரியாதையும், வளமும், பாதுகாப்பும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் பிறக்கின்றன: அது ஒரு நாட்டின் ‘தொழில்நுட்பத் திறன்’. அந்தத் திறனை அடையத் தேவையான அறிவுத்திறன் இந்தியாவிடம் அபரிமிதமாக உள்ளது.
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அந்தத் திறமையை நாம் பெருமளவில் ஏற்றுமதி செய்துவிட்டோம், குறிப்பாக அமெரிக்காவிற்கு. எப்போது இந்தியாவில் அந்தத் தொழில்நுட்ப வலிமையை நாம் உருவாக்குகிறோமோ, அப்போதுதான் நமது நாகரிகத்தின் பலம் உலகிற்குத் தெரியவரும்.
Open letter to Indians in America.
—
Dear brothers and sisters from Bharat:Like I did 37 years ago, you arrived in America with no money but with a good education and cultural heritage from Bharat. You achieved outstanding success. America was good to us. For that we must…
— Sridhar Vembu (@svembu) April 27, 2026
இதைச் சிந்திப்பது உங்களில் பலருக்குக் கடினமாக இருக்கலாம். இருந்தாலும் தயவுசெய்து தாய்நாட்டிற்குத் திரும்பி வாருங்கள். பாரத மாதாவுக்கு உங்கள் திறமை தேவைப்படுகிறது.
நமது நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களை வளமான பாதையில் வழிநடத்த, நீங்கள் இத்தனை ஆண்டுகளாகப் பெற்ற தொழில்நுட்பத் தலைமைப் பண்பு தேவை. இதை ஒரு புனிதமான லட்சியமாக எடுத்துக்கொண்டு நாம் செய்வோம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூலதளம்: International
Click the link above to read the full article on the original website.