மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தொடங்கி நடந்து வருகிறது. ஈரானும் இருபெரும் வல்லரசு நாடுகளை எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
திங்களன்று புளோரிடாவில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய அவர், “கடந்த ஒரு மாதத்தில் ஈரானில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்கா தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களால் அந்நாட்டின் ஏவுகணைத் திறன் 10 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ராணுவக் கட்டமைப்பு இடிக்கப்பட்டது. கடந்த மூன்றரை நாட்களில் மட்டும் ஈரானின் 46 அதிநவீனக் கடற்படைக் கப்பல்களை அமெரிக்க ராணுவம் கடலில் மூழ்கடித்திருக்கிறது.

இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளிடம் பேசியபோது, ‘ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் திறன் முற்றிலுமாக இடிக்கப்படுகிறது. கடற்படை போய்விட்டது. அவை அனைத்தும் கடலின் அடிப்பகுதியில் கிடக்கின்றன. 46 கப்பல்கள்… உயர் தரமான கப்பல்கள் அவை’ என்றார். நான், `உயர்மட்ட கப்பல் என்றால் அவற்றைக் கைப்பற்றியிருக்கலாமே… ஏன் கைப்பற்றவில்லை’ என்று கேட்டேன்.
அவர், ‘அவற்றை மூழ்கடிப்பது மிகவும் வேடிக்கையாக சுவாரஸ்யமாக இருந்தது’ என்றார். அமெரிக்க இராணுவம் எதிரி முழுமையாகவும், தீர்க்கமாகவும் தோற்கடிக்கப்படும் வரை பின்வாங்காது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்திற்கு ஈரான் முட்டுக்கட்டை போட்டால், இதுவரை நடத்தியதை விட 20 மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும். ஈரான் ஒரு தேசமாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அதன் இலக்குகள் அழிக்கப்படும். இது நடக்கக்கூடாது என விரும்புகிறேன்.

இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவின் பரிசு. எனது இந்த முடிவு பெரிதும் பாராட்டப்படும் எனவும் நம்புகிறேன்.” என்றார்
ட்ரம்பின் இந்த உரைக்கு பதிலளித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) செய்தித் தொடர்பாளர்,“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒரு லிட்டர் எண்ணெய் கூட இப்பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டோம். போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்” எனத் தெரிவித்திருக்கிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.