கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே பார்க்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் வேலுமணி தான் சிறை செல்வார் என 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் மு.க ஸ்டாலின் கூறினார். அந்தளவுக்கு கோவையில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.
வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பல்வேறு வியூகங்களை திமுக வகுத்தது. அது கைக் கொடுக்காததால் செந்தில் பாலாஜியை கோவை திமுக பொறுப்பாளராக களமிறக்கியது. உள்ளாட்சி தேர்தலில் பரிசு மழைகளை இறக்கி அவர் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தார்.

சட்டமன்ற தேர்தலிலும் செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வந்த நிலையில், வேலுமணி அவரை ஓவர்டேக் செய்து களத்தில் வேகம் காட்டி வருகிறார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக பரிசுகளை இறக்கியது.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் வேட்டி, சட்டை, சேலை, ஹாட் பாக்ஸ், ஃபிளாஷ்க், குடை, தட்டு உள்ளிட்ட பொருள்களை பரிசாக வழங்கினார். அந்தப் பொருள்கள் கொடுத்த சில நாள்களிலேயே தொண்டாமுத்தூர் தொகுதியில் மேலும் சில பரிசுகளை கொடுத்து வேலுமணி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தொண்டாமுத்தூர் மக்களுக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வேலுமணியின் இந்த நகர்வு திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியபோது, “தொண்டாமுத்தூர் தொகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில் சுமார் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக லாரிகள் மூலமாக டிரம்கள் கொண்டு வரப்படுகின்றன.

அந்தந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து காலை 6-8 மணிக்குள் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்டியலின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் பல சர்ப்ரைஸ் பரிசுகள் இறங்க வாய்ப்புள்ளது” என்றனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.