கோவி.செழியன்: நிர்வாகிகளின் அதிருப்தி, உள்ளடியை சமாளிக்க வியூகம்! – திருவிடைமருதூரில் வாகை சூடுவாரா?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருவிடைமருதூர் தனி தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த கோவி.செழியன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று தற்போது உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திருவிடைமருதூரில் கோவி.செழியன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்கிறார்கள் கட்சி தரப்பில்.

ஆனால் செழியன் மீது தற்போது நிலவும் அதிருப்தி உள்ளிட்டவையால் தொகுதியில் திமுக பின்னடைவை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளதாக சில கருத்து கணிப்புகள் தெரிவிப்பதாக பரவும் தகவல் கட்சிக்குள் பரபரப்பை பற்றவைத்துள்ளது.

கோவி.செழியன்

மண்டல தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளார். ஆனால் சில தொகுதிகள் திமுகவிற்கு சாதகமாக இல்லை என்ற கருத்து அரசியல் ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகின்றன. அதில் திருவிடைமருதூர் தொகுதியும் ஒன்று என்கிறார்கள்.

இதனால் கோவி.செழியன் நான்காவது முறை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. இதை அவர் உணர்ந்ததால் தற்போது தொகுதிக்குள் அனைத்திலும் தாராளம் காட்டி வருகிறார் என்கிறார்கள் சிலர்.

இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் தரப்பில் பேசினோம், “திருவிடைமருதூர் தொகுதியில் 2011ல் போட்டியிட்ட கோவி.செழியன் சுமார் 400 வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று நூலிழையில் தொகுதியை தன் வசம் ஆக்கினார். இதையடுத்து 2016 சுமார் 4,000 மற்றும் 2021ல் சுமார் 10,000 என அதிக வாக்கு விதியாசத்தில் வெற்றி பெற்றார். கொறடாவாக இருந்த செழியன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அமைச்சராகவும் இருக்கிறார்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்

தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தக்க வைத்திருப்பவரால் தொகுதி போதிய வளர்ச்சி அடையவில்லை என்கிற கருத்து மக்களிடம் நிலவுகிறது. இரண்டு முறை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்பதால் மக்கள் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. தற்போது திமுக ஆளும் கட்சியாகவும், செழியன் அமைச்சராகவும் இருக்கிறார். அதற்கேற்ற வளர்ச்சி தொகுதியில் நடந்திருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள்.

செழியன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட அரசு கலைக்கல்லூரி மட்டும் மக்களிடம் கவனம் பெற்றுள்ளது. கல்லூரி தொடர்பான உதவிக்கு செல்பவர்களிடம் சில நிர்வாகிகள் பெயரை சொல்லி அவர்களை பாருங்கள் என திருப்பி அனுப்பி விடுகிறாரார். நல்லது நடக்கும் என நம்பி செல்கிறவர்கள் சுவற்றில் அடித்த பந்தாக திரும்புவதால் மனம் வெதும்புகின்றனர்.

முன்பு தொகுதிக்குள் காரில் சென்றால் கார் கண்ணாடி திறந்திருக்கும், பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் வைத்தபடியே செல்வார். அவரது எளிமை தான் அவருக்கான அடையாளம். ஆனால் அமைச்சர் ஆன பிறகு ஆளே மாறி விட்டார் என்கிறார்கள். தற்போது தேர்தல் செலவிற்கு தேவையான பசை செழியனிடன் இருக்கிறது. தொகுதி எப்படி இருக்கிறது என சிலரை நியமித்து சில மாதங்களுக்கு முன்பு சர்வே ஒன்றை எடுக்க `வீக்’ என ரிசல்ட் வந்ததை செழியனே எதிர்பார்க்கவில்லை. இதை சரி செய்வதற்காக புத்தாண்டு, பொங்கலுக்கு தொகுதி முழுக்க வீடு தவறாமல் சில்வர் பாத்திரம், புடவை பரிசாக கொடுத்தார். இதை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்தனர்.

கோவி. செழியன்
கோவி. செழியன்

கல்யாணசுந்தரத்திடம் இருந்த வடக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சாக்கோட்டை அன்பழகன் மாவட்ட பொறுப்பாளரானதும் திருவிடைமருதூரில் உள்ள முக்கியமான சீனியர் ஒருவரை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால் செழியன் அந்த சீனியரை கண்டு கொள்வதில்லை. கோஷ்டி அரசியலை ஊக்குவிக்கிறார். இதனால் பல நிர்வாகிகள் செழியன் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இது போன்ற பல காரணங்களால் கோவி.செழியன் வரும் தேர்தலில் பின்னடவை சந்திக்க வாய்ப்புள்ளது. இதை உணர்ந்தவர் தொகுதி மாறாலாமா என யோசிக்க, அதற்கான சூழல் இல்லாததால் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். தற்போதைக்கு திமுக-வை பொறுத்தவரை கோவி.செழியன் தான் வேட்பாளர்.

அதிமுக-வில்…!

அதிமுக-வில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜகுமாரன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ மகன் எழில்செல்வன், டெல்டா குமார் உள்ளிட்ட மொத்தம் 46 பேர் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ராஜகுமாரன் தலைமையிடம் பேசி வருவதாகவும், இவருக்கு மாவட்ட முக்கிய புள்ளி பரிந்துரை செய்வதாகவும் சொல்கிறார்கள்.

ஆடுதுறையில் புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் அருள்ராஜ், கடந்த முறையே அதிமுகவில் போட்டியிடுவார் என பவரலாக சொல்லப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தன் ஆதரவாளரான யூனியன் வீரமணிக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்.

கோவி. செழியன்
கோவி. செழியன்

தற்போது டாக்டர் அருள் தனது மகள் டாக்டர் ரம்யாவிற்கு சீட் கேட்கிறார். பசை ரீதியாக பலமாக இருக்கும் கோவி.செழியனை அதே ரூட்டில் மல்லுகட்ட ரம்யா, ராஜகுமாரன் இருவரும் சரியான நபர்களாக இருப்பார்கள் என்றும் இவர்களில் ஒருவரை வேட்பாளராக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். தொடர்ந்து மூன்று முறை தொகுதியை தக்க வைத்துள்ள செழியன் மீது தன் கட்சியினரே ஆதங்கத்தில் இருக்கின்றனர். தற்போது மீண்டும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கோவி.செழியன். இதற்காக தொகுதி முழுக்க ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்கிற விபரம் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளார்.

ஒரு வீட்டில் ஐந்து வாக்குகள் இருந்தால் வெள்ளி பொருள்கள் என வாக்கிற்கு ஏற்ற வகையில் பரிசு பொருள்களை வீட்டுக்கு வீடு கொடுக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாட்டை சத்தமில்லாமல் செய்து வருகிறாராம்.

இன்னொருபுறம், `வெளியில் சொல்வது போல் தொகுதி நிலவரம் இல்லை திமுகவிற்கு சாதகமாக உள்ளது. கோவி.செழியன் இந்த முறையும் வெற்றி பெறுவார். அவர் வளர்வதை விரும்பாத உள்கட்சியினர் சிலர் அவருக்கு எதிரான நெகடிவ் கருத்துக்களை பரப்புக்கின்றனர். உள்ளடி வேலைகளை முறியடித்து களத்தில் தனக்கான வெற்றியை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பை அவர் செய்து வருவதாக’ தெரிவித்தனர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Prime Minister Modi does not come to her: ‘What are you afraid of from us?’ – Priyanka Gandhi questions!

“Kargil has become old… Let him sit and cheer” – Prime Minister Modi in Parliament