Budget 2026: “இது 5 சதவீத மக்களுக்கானது” – பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வது என்ன?

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று அவர் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைக் கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதனால், இந்த ஆண்டின் பட்ஜெட் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரி, தற்போது கையெழுத்தாகி உள்ள இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம், உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை போன்றவை நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இதைச் சமாளிக்கும் வகையில், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததுபோல இந்தப் பட்ஜெட் அமையவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ்:

இந்த ஆவணங்களை இன்னும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியிருந்தாலும், பட்ஜெட் 2026/27 குறித்து உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை அது பூர்த்தி செய்யவில்லை என்பது 90 நிமிடங்களிலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டது.

இது முற்றிலும் பொலிவற்ற (மந்தமான) பட்ஜெட். மேலும், பட்ஜெட் உரையானது வெளிப்படைத்தன்மை அற்றதாக இருந்தது; ஏனெனில், முக்கியமான திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எவ்வித தெளிவான தகவலையும் அது வழங்கவில்லை.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை. இந்தப் பட்ஜெட் திசையற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, செயலற்றது மற்றும் மக்களுக்கு எதிரானது.

இது பெண்கள், விவசாயிகள், கல்வித்துறை மற்றும் எஸ்சி (SC), எஸ்டி (ST), ஓபிசி (OBC) பிரிவினருக்கு எதிரானது. இந்தப் பட்ஜெட்டிலும் மேற்கு வங்கத்துக்கு எதுவும் வழங்கவில்லை.

காங்கிரஸ் எம்.பி சசிதரூர்:

இந்தப் பட்ஜெட் குறித்து எங்களுக்கு மிகக் குறைவான விவரங்களே கிடைத்துள்ளன. பட்ஜெட்டில் 3 முதல் 4 தலைப்புகள் மட்டுமே இருந்தன. நாங்கள் அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் (All India Institute of Ayurveda) குறித்து ஏதேனும் அறிவிக்கப்படும் எனக் காத்திருந்தோம்.

அது கேரளாவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஏனெனில், எங்களிடம் ஆயுர்வேதத்திற்கான நீண்டகால பாரம்பர்யம் உள்ளது. ஆனால், பட்ஜெட்டில் கேரளாவின் பெயர் உச்சரிக்கப்படுவதை நாங்கள் கேட்கவில்லை.

சசிதரூர்
சசிதரூர்

மீனவர்கள் மற்றும் தேங்காய்கள் பற்றிப் பேசினார்கள். அது ஒருவேளை கேரளாவைக் குறிக்கலாம். ஆனால், கப்பல் பழுதுபார்ப்பு பற்றிப் பேசும்போது, வாரணாசி மற்றும் பாட்னா ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டார்கள், கேரளாவைக் குறிப்பிடவில்லை.

இது சற்றே ஆச்சரியமளிக்கிறது. ஒருவேளை பட்ஜெட் ஆவணத்தில் இன்னும் கூடுதல் விவரங்கள் இருக்கலாம். நான் அதை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால், பட்ஜெட் உரையில் மிகக் குறைவான தகவல்களே இருந்தன.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MNREGA) கூட ஊதியத்தைத் தீர்மானிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் எனப் பட்ஜெட்டில் கூறுகிறார்கள். ஆனால், விவசாயக் காலங்களில் அவர்கள் சரியான முறையில் ஊதியத்தை வழங்கவில்லை.

செயற்கை நுண்ணறிவு விவசாயத்திற்குப் பயனளிக்காது. சர்க்கரை விலை ஏன் உயர்த்தப்படவில்லை? இதன் விளைவாக விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். சர்க்கரை விலை உயராவிட்டால், கூட்டுறவுத் துறை மூடப்படும் அபாயம் ஏற்படும். மத்திய அரசு விவசாயிகளுக்கு என்ன உதவி செய்துள்ளது? 8 முதல் 9 ஆண்டுகள் ஆகியும் சர்க்கரை விலையே உயரவில்லை.

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்
காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்

பெங்களூருக்கான அதிவேக ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறதே தவிர எந்த அதிவேக ரயிலும் வராது. பெங்களூரு குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. பிரதமர் மோடியே இதனை ஒரு உலகளாவிய நகரம் என்று அழைத்தார். ஆனால், அந்த உலகளாவிய நகரத்திற்கு அவர் என்ன முக்கியத்துவம் கொடுத்துள்ளார்? இது குறித்த முழுமையான தகவல்களைப் பெற்ற பிறகு நான் விரிவாகப் பேசுகிறேன்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சத்ருக்கன் சின்ஹா:

இந்தப் பட்ஜெட் இது ஒரு ‘அள்ளிவிடும் மற்றும் மூடி மறைக்கும்’ (Phenku and Lapetu) பட்ஜெட். இந்தப் பட்ஜெட் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) திட்டத்திற்கானதல்ல. இது வேலைவாய்ப்பு குறித்தோ அல்லது நாட்டின் தற்போதைய கடன் சுமை குறித்தோ பேசவில்லை.

மத்திய அரசு பல மாநிலங்களுக்கு நிதி வழங்க வேண்டியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக எந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது? இந்தப் பட்ஜெட் மதிப்பெண் கொடுப்பதற்குக் கூடத் தகுதியற்றது.

தி.மு.க எம்.பி. கனிமொழி:

மாற்றம் இல்லாத ஏமாற்றம். இந்தப் பட்ஜெட்டில் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டை நினைவுகூர வைப்பதற்கு, தேர்தல்களால்கூட முடியவில்லை.

கனிமொழி
கனிமொழி

சமாஜ்வாடி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ்:

பாஜக பட்ஜெட்டின் விளைவு, பங்குச்சந்தை சரிந்து விழுந்திருக்கிறது. நாங்கள் இதை முன்பே சொல்லியிருந்தோம்.

பாஜக அரசு மீது எவ்வித நம்பிக்கையும் இல்லாதபோது, அதன் பட்ஜெட்டில் இருந்து மட்டும் எதை எதிர்பார்க்க முடியும்? பாஜகவின் ஒவ்வொரு பட்ஜெட்டையும் நாங்கள் ‘1/20 பட்ஜெட்’ (இருபதில் ஒன்று) என்றே கருதுகிறோம்; ஏனெனில் இது வெறும் 5 சதவீத மக்களுக்கானது மட்டுமே.

பாஜகவின் பட்ஜெட் என்பது அவர்களின் கமிஷன்களை உறுதி செய்வதற்கும், தங்களுக்கு நெருக்கமானவர்களை (தங்கள் ஆட்களை) நிலைநிறுத்துவதற்குமானது. பாஜகவின் பட்ஜெட் என்பது ‘பாஜக பாணி ஊழலின்’ கண்ணுக்குத் தெரியாத கணக்குப் புத்தகம்.

இந்தப் பட்ஜெட் சாதாரண மக்களைப் பற்றி குறிப்பிடவும் இல்லை, அவர்களைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் நிலையிலும், மக்களுக்கு வரிச் சலுகை வழங்காதது ‘வரிச் சுரண்டல்’ தவிர வேறொன்றுமில்லை.

பணக்காரர்களின் வணிகத்திற்கும் பயணத்திற்கும் பத்து வகையான விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் தவிக்கும் மக்களின் ‘எதிர்பார்ப்புத் தட்டு’ காலியாகவே உள்ளது.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

நடுத்தர வர்க்கத்தினர் முற்றிலும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். சுரண்டப்பட்ட ஏழை மக்கள் முன்பை விட இன்னும் கீழே தள்ளப்படுகிறார்கள். அவர்களின் கிழிந்த துணியைத் தைப்பதற்குப் பதிலாக, இந்த பட்ஜெட் அதை இன்னும் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டது.

ஏனெனில் சமூகப் பாதுகாப்பு என்பது வெறும் சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் தங்களுக்கான சிறு நிவாரணத்தைக் கூட ஒரு தொலைநோக்கிக் கொண்டு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.

இது ஒரு ஏமாற்றமான, கண்டனத்திற்குரிய பட்ஜெட்!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Do not sit on the stage” – Senthil Balaji with red eyes in Thondamuthur; relatives in turmoil

Removal of China’s top military commander: Is the war readiness in question?