இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பராசக்தி’.
இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களை அடிப்படையாகவும் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
இந்தப் படம் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தைச் சுட்டிககாட்டுகிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ‘பராசக்தி’ திரைப்படம், காங்கிரஸ் கட்சியை தவறாக சித்தரித்திருக்கிறது. அதனால் அந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (ஜன.14) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், ” ‘பராசக்தி’ திரைப்படம் 1965-ல் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.
இந்தி எதிர்ப்புக்காக மாணவர்கள் கிளர்ந்து எழுந்த போராட்டம் அது.
இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை எந்த மாணவ இயக்கமும் எங்கும் நடத்தியது இல்லை.
1967-ல் ஆட்சி மாற்றம் வந்ததற்கு காரணமும் அந்த மாணவர்கள் நடத்திய சமுதாயப் போராட்டம் தான்.

இந்தி திணிப்பின் போது இருந்த காங்கிரஸ் வேறு. இப்ப இருக்கும் காங்கிரஸ் வேறு”என்று பேசியிருக்கிறார்.
தொடர்ந்து திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் என்ற கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அது தேர்தலில் விளைவை ஏற்படுத்துமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது.
அதற்கு பதலளித்த அமைச்சர் ரகுபதி, ” கூட்டணிக்குள் இவை விளைவுகளை ஏற்படுத்தாது. அவர்கள் (காங்கிரஸினர்) தங்களது விருப்பங்களைத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.