தனக்குப் போட்டியாக வந்த சொந்தக் கட்சி வேட்பாளர்; வேட்பு மனுவைக் கிழித்துத் தின்ற சிவசேனா வேட்பாளர்

புனே மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சிவசேனா சார்பாக 36ஏ வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த உத்தவ் காம்ப்ளே வந்திருந்தார்.

அங்கு வந்து பார்த்தபோது ஏற்கனவே அதே சிவசேனாவைச் சேர்ந்த மச்சேந்திர தேவாலேயும் சிவசேனா சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர்கள் இரண்டு பேருமே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பதற்கான கடிதத்தை தங்களது வேட்பு மனுவோடு சேர்த்து தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு பரிசீலனையின்போது இது தெரிய வந்தது. இரண்டு பேரில் யாரோ ஒருவர் போலி கட்சி கடிதத்தை வேட்பு மனுவில் இணைத்திருந்தார்.

பூஜா மோரே
பூஜா மோரே

தேர்தல் அதிகாரிகளிடமிருந்து மச்சேந்திர தேவாலேயின் வேட்பு மனு ஆவணங்களை வாங்கி உத்தவ் காம்ப்ளே பார்த்துக்கொண்டிருந்தார். அந்நேரம் யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மச்சேந்திராவின் வேட்பு மனுவில் இருந்த சிவசேனா வேட்பாளர் என்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தைச் சுக்குநூறாகக் கிழித்து எறிந்தார் காம்ப்ளே.

கிழித்து வாயில் போட்ட வேட்பாளர்

அவரது செயலைப் பார்த்த தேர்தல் அதிகாரிகள் ஆடிப்போனார்கள். கிழித்த ஆவணத்தை அப்படியே வாயில் போட்டுவிட்டார். அதோடு நேராக பாத்ரூம் சென்றுவந்தார். அவர் பாத்ரூம்பில் துப்பினாரா அல்லது விழுங்கினாரா என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்புகாரை காம்ப்ளே மறுத்துள்ளார்.

அவர் இது குறித்து கூறுகையில், ”நான் வேட்பு மனுவைச் சாப்பிடவில்லை. எங்களது கட்சியில் யாரோ இதே வார்டில் போட்டியிடுவதாகக் கேள்விப்பட்டேன். தேவாலே என்ற பெயரை எனக்குத் தெரியாது. எங்கள் கட்சிக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. நான் சாப்பிட்டதாகச் சொல்கிறார்கள் என்றால் என்னை மருத்துவப் பரிசோதனை செய்யட்டும்.

வேட்பு மனு எனது வயிற்றில் இருந்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.

தேவாலேயிடம் ஏற்கனவே தாக்கல் செய்த வேட்பு மனுவின் நகலைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பழைய வைரல் வீடியோவால் வேட்பாளர் பதவி பறிப்பு

புனேயில் 2வது வார்டு சார்பாக பூஜாமோரே என்பவர் பா.ஜ.க சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தவுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் பூஜாமோரே கலந்து கொண்ட பழைய வீடியோ ஒன்று புதிதாக சோசியல் மீடியாவில் வைரலானது.

அதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவி குறித்து தனிப்பட்ட முறையில் பூஜா விசர்சனம் செய்திருப்பார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் பா.ஜ.கவின் கவனத்திற்குச் சென்றது.

உடனே அவரை கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் இருந்து பா.ஜ.க நீக்கிவிட்டது. இதனை மத்திய அமைச்சர் முரளிதர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

இது குறித்து பூஜா கூறுகையில், ”என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி, பாஜகவின் கொள்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சித்தரிக்க முயன்றனர். ட்ரோலிங்கைக் கருத்தில் கொண்டு, எனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவது என மனப்பூர்வமாக முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

எப்போதோ பேசிய பேச்சு இப்போது பூஜாவின் அரசியல் எதிர்காலத்திற்கு வினையாக வந்து அமைந்துள்ளது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Scanning Bangladeshis on mobile phones? – Controversial video of Uttar Pradesh police officers

<div>‘சோத்தைத் திங்கிரியா..!’ – சுசீந்திரம் தேரோட்டத்தில் டென்ஷனாகிய சேகர் பாபு! – என்ன நடந்தது?</div>