Tuvalu: சில ஆண்டுகளில் மூழ்கிவிடும்; அடையாளம் அழியாது! – குட்டி நாட்டின் முயற்சி; உதவும் ஆஸ்திரேலியா

காலநிலை மாற்றத்தால் முழுமையாக அழியும் அபாயத்தில் உள்ள ஒரு நாடு, தன்னை ‘டிஜிட்டல் நாடாக’ மாற்றிக் கொண்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதுகிறது. அந்த நாடு தான் பசிபிக் பெருங்கடலின் நடுவே அமைந்துள்ள மிகச் சிறிய தீவு நாடான ‘துவாலு’.

மிகக் குறைவான மக்களால் மட்டுமே அறியப்பட்ட இந்த நாடு, இன்றைக்கு உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

Tuvalu - துவாலு
Tuvalu – துவாலு

காரணம், காலநிலை மாற்றத்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாடு முழுவதுமாகக் கடலுக்குள் மூழ்கி மறைந்து போகும் அபாயம் உள்ளது.

துவாலு, ஒன்பது சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. கடல் மட்டத்திலிருந்து வெறும் ஒன்று அல்லது இரண்டு மீட்டர் உயரத்தில் மட்டுமே இந்த தீவுகள் அமைந்துள்ளன. இதுவே துவாலு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயமாக உள்ளது. உலக வெப்பமயமாதலின் காரணமாக கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக, துவாலுவின் நிலப்பரப்பு மெதுவாகக் கடலால் விழுங்கப்பட்டு வருகிறது.

துவாலு சந்திக்கும் பிரச்னைகள்

சுமார் 11,000 மக்கள் மட்டுமே துவாலுவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் மீன்பிடிப்பு, விவசாயம் மற்றும் அரசாங்க வேலைகளைச் சார்ந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டம் உயர்வதால், கடல் நீர் குடிநீரில் ஊடுருவி உப்புக் கலப்பது, விவசாய நிலங்கள் சேதமடைவது போன்ற கடுமையான பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும், புயல்கள் மற்றும் பெரும் அலைகளால் சில பகுதிகள் ஏற்கனவே கடலுக்குள் மூழ்கிவிட்டன. நிலப்பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்காலத்தில் துவாலு மக்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

Tuvalu - துவாலு
Tuvalu – துவாலு

உலகின் முதல் ‘டிஜிட்டல் நாடு’

இந்த அச்சுறுத்தலான சூழ்நிலையிலும் துவாலு ஒரு அதிசயமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. தங்கள் நாடு அழிந்தாலும், அதன் அடையாளத்தை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் முயற்சியில் துவாலு ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தங்கள் நாட்டின் நில வரைபடங்கள், அரசு ஆவணங்கள், சட்டங்கள், மக்களின் பதிவுகள், மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவை 3D மாடல்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் உதவி

துவாலுவும் ஆஸ்திரேலியாவும் 2023-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ‘பாலெபிலி யூனியன்’ எனப்படும் இந்த ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் 280 வரை துவாலு குடிமக்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதி வழங்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் இடம்பெயர்வை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்ட உலகின் முதல் ஒப்பந்தமாக இது கருதப்படுகிறது. இது துவாலு மக்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் இதே நிலையை எதிர்கொள்ளும் பல நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

துவாலு - இருப்பிடம்
துவாலு – இருப்பிடம்

துவாலு உலகிற்கு சொல்லும் செய்தி

இன்றைக்கு இந்தச் சிறிய தீவு நாடான துவாலு சந்திக்கும் பிரச்னைகள், நாளை உலகின் பல கடலோரத் தீவுகள் மற்றும் நாடுகள் சந்திக்கப்போகும் ஒரு எச்சரிக்கையாகும். காலநிலை மாற்றம் நாளை வரும் அபாயம் அல்ல; இன்றே உலகின் ஒரு நாட்டை அழித்துக்கொண்டிருக்கும் உண்மை என்பதை துவாலு உலகிற்கு உணர்த்துகிறது.!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Uttav, who said ‘Congress can go to hell,’ is now inviting them to join the alliance! – Mumbai election turmoil!

“We do not accept Vijay as a politician,” says Sarathkumar.