மும்பை மாநகராட்சி: `வேட்புமனுவோடு கட்டுரை எழுதிக்கொண்டு வாருங்கள்’ – பதறும் வேட்பாளர்கள்

மும்பை மாநகராட்சிக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பல முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. சிவசேனா(ஷிண்டே)வும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இது தவிர உத்தவ் தாக்கரே தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவோடு சேர்த்து தங்களது வார்டில் வெற்றி பெற்றால் எந்த மாதிரியான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வோம் என்பது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி அதனையும் வேட்பு மனுவோடு சேர்த்து கொடுக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டே இது போன்ற ஒரு பிரிவு வேட்பு மனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போதுதான் இத்திட்டம் முழு அளவில் அமல்படுத்தப்படுகிறது. இந்த புதிய உத்தரவுக்கு வேட்பாளர்களில் சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கட்டுரை 100 முதல் 500 வார்த்தைகள் கொண்டதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரவி ராஜா

கட்டுரை தாக்கல் செய்யவில்லையெனில் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று தேர்தல் அதிகாரிகள் சொன்னபிறகு வேட்பாளர்கள் அவசர அவசரமாக கட்டுரை எழுதி வேட்பு மனுவோடு சேர்த்து கொடுத்தனர்.

இது குறித்து மலாடு பகுதியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் வினோத் மிஸ்ரா கூறுகையில்,”எனக்கு கட்டுரை எழுதிக்கொடுப்பதில் எந்த வித பிரச்னையும் ஏற்படவில்லை. எனது வார்டில் என்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறேன். ஏற்கனவே சில திட்டங்கள் முடிக்கப்படாமல் இருக்கிறது. அவற்றை முடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன்”என்று தெரிவித்தார்.

தாராவியில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் ரவி ராஜா இது குறித்து கூறுகையில்,”எனது வார்டில் அதிக அளவில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில்கள் நடைபெறுகிறது. தாராவியில் குடிசை மேம்பாட்டுத்திட்டங்கள் நடைபெறுவதால் மண்பாண்டங்கள் செய்யும் அனைவருக்கும் ஒரே இடத்தில் மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்க முயற்சி செய்வேன். இதனை மாநில அரசிடம் எடுத்துச்செல்வேன்”என்று தெரிவித்தார்.

ஆனால் சில வேட்பாளர்களுக்கு இந்த திட்டம் பிடிக்கவில்லை. 2017 தேர்தலில் தோல்வியடைந்து, மீண்டும் களத்தில் இறங்கியுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஷீத்தல் மத்ரே, இந்த நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “வேட்பாளர்கள் எப்படியும் தாங்கள் போட்டியிடும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, தங்கள் பணிகள் மற்றும் வாக்குறுதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் அல்லது சிறு புத்தகங்களை விநியோகிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதுவதில் என்ன பயன் என்று எனக்குப் புரியவில்லை,” என்று அவர் கூறினார்.

அஸ்லாம் ஷேக்

முன்னாள் மாநகராட்சி உறுப்பினரான காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஸ்லாம் ஷேக், இதுபோன்ற கேள்விக்கு தான் இதற்கு முன்பு பதிலளிக்க நேர்ந்ததில்லை என்று கூறினார். ஷேக்கின் மகன் ஹைதர் 34-வது வார்டிலும், அவரது சகோதரி கமர்ஜஹான் சித்திக் 33-வது வார்டிலும், அவரது மருமகன் சைஃப் அஹத் கான் 62-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ராகேஷ் கோயல் இது குறித்து கூறுகையில்,” ஆரம்பத்தில் கட்டுரை மராத்தி மொழியில் எழுதலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் அதை ஆங்கிலத்திலும் எழுதலாம் என்று தேர்தல் ஆணையத்திடம் இருந்து மிகத் தாமதமாகவே விளக்கம் வந்தது. மராத்தியில் இவ்வளவு நீளமான கட்டுரையை எழுதுவது சவாலானது,” என்று கோயல் கூறினார்.

மும்பை ஆம் ஆத்மி கட்சியின் செயல் தலைவரான ரூபன் மஸ்கரேன்ஹாஸ் இது பற்றி கூறுகையில், “வேட்புமனு தாக்கல் செய்யும் போது கட்டுரை எழுதுவது ஒரு மறைமுகமான சிறு தொழிலை உருவாக்கியது. பல வேட்பாளர்கள் தங்கள் கட்டுரையை தயாரிக்க வெளி உதவியை நாட வேண்டியிருந்தது. சிலர் சாட்-ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம், மற்றவர்கள் வேட்பாளரின் தகுதி மற்றும் அவசரத்தைப் பொறுத்து, 5,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பணம் செலுத்தி, அந்தப் பணியை வழக்கறிஞர்கள் அல்லது ஆடிட்டரிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Coimbatore: Why was a wildlife relocation and treatment center established with surgical treatment facilities?

Why did the banner featuring Rama and Hanuman in Sri Lanka become controversial?