பெட்ரோல் விலையேற்றம்: `விலைவாசி உயர்வு முதல் ஹைப்ரிட் வாகனம் வரை’- சிக்கல்களை விளக்கும் கே.பி.முரளி!

மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று (மே 15, வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் விளைவாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.98-க்கும், டீசல் ரூ.95.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற மற்ற பெருநகரங்களிலும் மாநில வரிகளுக்கு ஏற்ப விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் நிலையம்
பெட்ரோல் நிலையம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 69 டாலரிலிருந்து 113-114 டாலராக எகிறியதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதிச் சுமையை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசலுடன் சேர்த்து CNG விலையும் கிலோவிற்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

போர் சூழல் தணியாத பட்சத்தில், வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தத் தொடர் விலை உயர்வு போக்குவரத்துச் செலவுகளை அதிகரிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு நேரடியாக வழிவகுக்கும் என்பதால் சாமானிய மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஆட்டோ, டாக்ஸி மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோர் இந்த விலை மாற்றத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கே.பி. முரளி
கே.பி. முரளி

இந்த நிலையில், உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி. முரளியிடம் பேசினோம்.

அவர், “இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ‘தினசரி விலை நிர்ணய முறை’ (Daily Pricing) அறிமுகப்படுத்தப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை அன்றே நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். தங்கம் மற்றும் வெள்ளியின் விலையைப் போலவே பெட்ரோல் விலையும் தினசரி மாறிக் கொண்டிருந்தது. ஆனால், 2022-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த நடைமுறையில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், உள்நாட்டில் விலையில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு, மீண்டும் அந்தத் தினசரி மாற்ற முறைக்குத் திரும்புவதற்கான அறிகுறியா என்பது வரும் நாட்களில் தான் உறுதியாகும்.

எண்ணெய் நிறுவனங்களின் நிதி நெருக்கடி

எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்திக்கின்றன என்ற செய்தி மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், அதன் பின்னுள்ள வணிகச் சிக்கல் தீவிரமானது. ஒரு டீலரின் லாபம் என்பது பெட்ரோலுக்கு சுமார் ரூ.3 மற்றும் டீசலுக்கு ரூ.2 மட்டுமே. இந்தத் தொகையில்தான் அவர்கள் மின்சாரக் கட்டணம் முதல் ஊழியர் சம்பளம் வரை அனைத்து நிர்வாகச் செலவுகளையும் ஈடுகட்ட வேண்டும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்குக் கச்சா எண்ணெயை வாங்கி, உள்நாட்டில் குறைந்த விலைக்கு விற்க நேரிடும்போது, அவர்களின் லாபம் மட்டுமல்லாது மூலதனமே (Capital) கரையத் தொடங்குகிறது. நிறுவனங்களிடம் மூலதனம் குறைந்தால், அவர்கள் சர்வதேச சந்தையில் டாலர்களைச் செலுத்தி எண்ணெய் வாங்க முடியாது. அவ்வாறு வாங்கத் தவறினால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, ‘விலை உயர்வு’ என்பது நிறுவனங்களின் ஒரு கட்டாயத் தேவையாக மாறிவிட்டது.

மக்களும் பணவீக்கமும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளை மட்டும் பாதிப்பதில்லை. இது ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்தும். டீசல் விலை உயரும்போது லாரிகளின் வாடகை உயர்கிறது, இது காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு நேரடியாக வழிவகுக்கிறது. ஒரு சாமானிய மனிதனின் மாதாந்திர பட்ஜெட்டில் இது பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகள் இந்த மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இது மறைமுகமாக நாட்டின் பணவீக்கத்தை அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது.

கடைவீதி
கடைவீதி

அரசாங்கத்தின் பங்கு மற்றும் வரிக்குறைப்பு

விலை உயர்வைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். மத்திய அரசு ஏற்கனவே தனது கலால் வரியை (Excise Duty) சில நிலைகளில் குறைத்துள்ளது. இருப்பினும், மாநில அரசுகள் விதிக்கும் ‘வாட்’ (VAT) வரி மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தை விட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.8 வரை குறைவாக உள்ளது. மாநில அரசுகள் தங்களின் வருவாயைப் பாதிக்காத வகையில் வரியைச் சற்றே குறைத்தால், அது பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும். ஆனால், இது முழுக்க முழுக்க அந்தந்த மாநிலங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாக முடிவுகளைப் பொறுத்தது.

எதிர்காலத் தட்டுப்பாடும் மாற்று வழிகளும்

இப்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்றாலும், பழையபடி எரிபொருள் மிகத் தாராளமாகக் கிடைக்கும் சூழல் தற்போது இல்லை. டீலர்கள் ஆர்டர் செய்யும் எரிபொருள் வந்து சேருவதில் சிறு காலதாமதங்கள் ஏற்படுகின்றன. போர்ச் சூழல் முடிவுக்கு வராதவரை இந்த நிச்சயமற்ற நிலை தொடரும்.

இன்னொரு பக்கம், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் போன்ற மாற்றுகள் வளர்ந்து வருகின்றன. எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் என்று மாறினாலும், பெட்ரோலின் தேவை குறையாது. இதனால்தான் எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து புதிய டெர்மினல்களைக் கட்டமைத்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டும் கலந்த ‘ஹைப்ரிட்’ சந்தையே எதிர்காலமாக இருக்கும்.

Creta EV

தீர்வு என்ன?

இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ‘கார் பூலிங்’ (Car Pooling) முறையைப் பின்பற்றுவது, அவசியமில்லாத இடங்களில் வாகனங்களை அணைத்து வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் பெரிய பலனைத் தரும். பிரதமர் குறிப்பிட்டதைப் போல, மிக உயரிய பதவியில் இருப்பவர்களே தங்களின் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளும்போது, பொதுமக்களும் எரிபொருளைப் பக்குவமாகப் பயன்படுத்தப் பழக வேண்டும். சேமிக்கப்படும் ஒவ்வொரு சொட்டு எரிபொருளும் நாட்டின் பொருளாதாரத்திற்குச் செய்யப்படும் உதவியாகும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

A mysterious humming sound inside the ear! The Taos Hum that will shock the US? | The Logic | Mystery

Will the growing closeness between the US and China pose a challenge to India? Experts’ perspectives.