CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் – சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் – கே.சி.வேணுகோபால் சந்திப்பைப் பற்றி இரண்டு கட்சிகளின் முகாம்களிலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.

வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம்
வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம்

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் நிலவி வரும் நிலையில், நேற்று மதியம் ஊடகங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, டெல்லியிலிருந்து அவசரமாக சென்னை வரும் கே.சி.வேணுகோபால் முதல்வரை இரவு 8 மணியளவில் சந்திக்கவிருக்கிறார் என்பதே செய்தி. சந்திப்பு உண்மையிலேயே நடக்கிறதா? அப்படி நடந்தால் எங்கே வைத்து சந்திப்பு என எதையும் திமுக – காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தன.

கூட்டணி குறித்த சந்திப்பாக இருப்பின் அறிவாலயத்தில் வைத்தே நடைபெறும் என அனுமானித்து மாலை 6:30 மணியிலிருந்தே ஊடகத்தினர் அறிவாலயத்தில் மைக் போட்டு காத்திருந்தனர். ஆனால், அப்படியொரு சந்திப்பு நடக்கப்போவதாக அறிவாலய வட்டாரத்தினர் கடைசி நிமிடம் வரை உறுதிப்படுத்தவில்லை.

7:45 மணியாகியும் அறிவாலயத்தில் சி.எம் வருவதற்கான எந்த பரபரப்பும் இல்லை. காவலர்களுக்கும் சி.எம் கான்வாய்க்கான அலர்ட் கொடுக்கப்படவில்லை. அப்போதுதான் சுதாரித்துக் கொண்ட செய்தியாளர்கள் கேமராவோடு சித்தரஞ்சன் சாலையை நோக்கி ஓடினர்.

சித்தரஞ்சன் சாலையில் கூடியிருக்கும் ஊடகத்தினர்
சித்தரஞ்சன் சாலையில் கூடியிருந்த ஊடகத்தினர்

சாலைக்கு வெளியே முதல்வரின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் காவலர்களுக்கும் இப்படியொரு சந்திப்பு நடக்கப் போவதாக எந்த அலர்ட்டும் கொடுக்கப்படவில்லை.

ஐ.டி.சியில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் இப்போதுதான் வீடு திரும்பியிருப்பதாகவும் கனிமொழியும் கே.என்.நேருவும் மட்டுமே உடன் இருப்பத்தாகவும் காங்கிரஸ்க்காரர்கள் யாரும் செக் போஸ்ட்டை தாண்டவில்லை என போலீஸ் தரப்பு தகவல் சொன்னது.

8:15 மணிக்கு மேல்தான் காவல்துறையினரும் உஷாராகினர். சித்தரஞ்சன் சாலையில் நுழைவில் கேமராக்கள் வளைத்து நிற்பதை காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய உளவுத்துறை, கே.சி.வேணுகோபாலின் காரை டி.டி.கே சாலை வழியாக வர வைத்தது. ஒரு சில ஊடகத்தினர் மட்டுமே இந்த நுழைவில் நின்றதால் மைக்குகளிடம் இருந்து தப்பித்து கே.சி.வேணுகோபால் சி.எம் வீட்டுக்குள் சென்று சேர்ந்தார்.

வேணுகோபால் வந்த டிபண்டர் காரில் அவருடன் சத்தீஸ்கரின் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ மட்டுமே இருந்தார்.

கே.சி.வேணுகோபாலின் கார்
கே.சி.வேணுகோபாலின் கார்

8:35 மணிக்கு கே.சி.வேணுகோபாலின் கார் சி.எம் இன் வீட்டை அடைந்தது. சிம்பிளான டின்னருக்கு பிறகு தொடங்கிய பேச்சுவார்த்தை 9:25 வரைக்கும் நீண்டது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்த வேணுகோபால், ஊடகங்கள் யாரும் இல்லாத இன்னொரு ரூட் வழியாக காரை திருப்பி விர்ரென கிளம்பினார்.

முதல்வருடன் கே.சி.வேணுகோபாலின் சீக்ரெட் சந்திப்பு குறித்து விசாரிக்கையில், ‘கிரிஷ் சோடங்கர் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைப்பது பற்றி டெல்லி ஊடகங்கள் வரைக்கும் கன்னாபின்னாவென பேட்டி கொடுத்ததில் முதல்வர் தரப்பு கடும் அப்செட். அதேமாதிரி, தமிழ்நாட்டிற்குள் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து சீண்டும் வகையில் பேசியதையும் திமுக ரசிக்கவில்லை.

இந்நிலையில்தான், பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று அறிவித்தது. உடனே, `திமுக காங்கிரஸை முதலில் அழைத்து பேசாது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

காங்கிரஸை திமுக காக்க வைத்து அவமதிக்கும்’ போன்ற பேச்சுகள் எழுந்தது. இதை தவிர்க்க முதல்வர் தரப்பு எண்ணியது. அதேமாதிரி, டெல்லி காங்கிரஸாரும் கூட்டணியை உடைத்து திமுக அதிர்ச்சி கொடுத்துவிடும் என்கிற கிலியில் இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் மேலிடமும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. இருதரப்பினுடைய பரஸ்பர விருப்பத்தின் பேரில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

செல்வப்பெருந்தகையை அழைத்து வந்தால் கிரிஷ் சோடங்கர் ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழும். அதனால்தான் யாரையும் அழைக்காமல் சிங் தியோவை மட்டும் கூட்டிக் கொண்டு முதல்வரை சந்தித்தார் கே.சி.வேணுகோபால்’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

‘கூட்டணி குறித்து ராகுல் சொல்லியனுப்பிய முக்கிய மெசேஜ்களை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் கூறியிருக்கிறார்’ என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர்.

‘அமைச்சரவையில் பங்கு கேட்டோம். அதை கொடுக்க முடியாதென முதல்வரே அறிவித்துவிட்டார். இதற்கு மேல் தேர்தலுக்கு முன்பாக அமைச்சரைவையில் பங்கு கேட்பதில் பிரயோஜனமில்லை. எனில், கடந்த முறையை விட அதிக தொகுதிகளையும் ராஜ்யசபா சீட்டையும் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், திமுக 2028 இல் தான் எங்களுக்கு ராஜ்ய சபாவை கொடுப்போம் என்கின்றனர். மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திமுக தலைமை எதிர்பார்க்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் ஒத்துக்கொண்டால் கட்சி ரொம்பவே பலவீனமாக தெரியும்.

கே.சி.வேணுகோபால்
கே.சி.வேணுகோபால்

மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் இனி கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டார்கள் என்று உறுதியளித்திருக்கிறோம். அதேமாதிரி அடுத்த மாதமே எங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். மேலும், 30 தொகுதிகள் வரைக்குமாவது பரீசிலியுங்கள் என்றும் கூறியிருக்கிறோம்.

இவை சம்பந்தமாக ராகுல் சொல்லியனுப்பிய மெசேஜ்களையும் முதல்வரின் காதில் போட்டிருக்கிறார் கே.சி.வேணுகோபால். இதெல்லாம் ஒரு இறுதிக்கட்ட இழுபறிதான். சீக்கிரமே சுமுகமாக பேசி முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவோம்’ என்கின்றனர் கதர் சட்டையினர்.

காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உள்விவரம் அறிந்த சிலர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Udhayanidhi troubled by relatives; police distressed! – Turmoil in Coimbatore DMK Youth Wing meeting

MDMK: “Symbol, Rajya Sabha seat…” – Arjunaraj after talks with DMK