தூத்துக்குடியில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலால் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனையும், உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியிலுள்ள கண்மாய் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நிலையில் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், மறுநாள் 12-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில் அதே காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், ராமநாதபுரத்த்கைச் சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ” இங்கு தனக்கு பாதுகாப்பு இல்லை, வேறு சிறைக்கு மாற்றுங்கள்” என சிறைக் காவலர்களிடம் கூறியதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுப்படி தர்ம முனீஸ்வரன், பாதுகாப்பு கருதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். பின்னர், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு கடந்த 5-ம் தேதி விசாரணைக்கு வந்தது. பின்னர், தொடர்ந்து 3 முறை நேரில் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி பிரீத்தா தெரிவித்து இருந்தார்..
அதன்படி, தர்ம முனிஸ்வரன் மதுரை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.
பின்னர், தர்ம முனீஸ்வரனிடம் தீர்ப்பு வழங்க உள்ள போக்சோ நதிமன்ற நீதிபதி பிரித்தா முன்பு காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.
குற்றம் சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் வழக்கு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என்றும், உங்களுக்கு என்ன மாதிரியான தண்டனை வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். எதுவும் சொல்லாமல் இருந்தார் தர்ம முனீஸ்வரன். அப்போது தர்ம முனீஸ்வரனிடம் குடிக்க தண்ணீர் எதுவும் வேண்டுமா என கேட்டார் நீதிபதி ப்ரீத்தா.
பின்னர், குற்றவாளி தர்ம முனிஸ்வரனை குற்றவாளி என்று அறிவித்தார் நீதிபதி ப்ரீத்தா. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொலை செய்த வழக்கிற்காக இரட்டைத் தூக்கு தண்டனையும், மாணவியின் உடலில் பலத்த காயம் ஏற்படுத்தியதற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸிங்கர் சிறப்பாக வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 20 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த 77-வது நாளான இன்று (25-ம் தேதி) தீர்ப்பளிக்கப்பட்டது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.