PM SHRI: “முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை!

தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கையை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி நிதியை நிறுத்தி வைத்தது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்ததும், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “இனிவரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையும், வருகையும் அதிகரிக்கும். இருமொழி கொள்கை என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. அதில் மாற்று கருத்தே கிடையாது. கொள்கை சமரசம் என்று பேச்சுக்கே இங்கு இடமில்லை” என்றிருக்கிறார். அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்” என்று பேசியிருந்தார்.

ராஜ் மோகன் - தவெக
ராஜ் மோகன் – தவெக

அமைச்சர் ராஜ்மோகன் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய முதல்வர் விஜய் அவர்கள் முதலில் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருக்கட்டும், பி.எம். ஸ்ரீ திட்டமாக இருக்கட்டும், லட்சக்கணக்கான கல்வியாளர்கள் கருத்துகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட கல்வி முன்னேற்றத் திட்டங்களே. இவை நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மாநிலங்களில் எல்லாம் கல்வி சிறப்பாக உள்ளது. சென்ற ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்காததற்கு காரணம், இதுபோன்ற நல்ல திட்டங்களை அரசியல் ரீதியாக எதிர்த்ததுதான். இங்கே தமிழ்நாடு கல்வி அமைச்சர் சிங்கப்பூரைப் பற்றி சொல்கிறார். சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

ஆக, அரசியல் கொள்கை முடிவில் எந்த சமரசமும் இல்லை என்று சொல்கிறார். ஆனால் இந்த கல்வித் திட்டங்கள் எல்லாம் அரசியல் கொள்கை அல்ல; அவசியமான கல்விக் கொள்கைகள். ஆகையால், இதுபோல் புதிய அமைச்சர்கள் எந்தக் கொள்கையையும் தீவிரமாக விசாரிக்காமல், ஆழமாக கலந்தாலோசிக்காமல் கருத்து சொல்வது மேம்போக்காக துறையை எடுத்துச் செல்வதற்கே வழிவகுக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

‘Is this how one should be treated if they are a sex worker?’ – A woman who was gang-raped in Delhi asks.

Stray dogs can no longer be released in public places! State governments… – Supreme Court takes a strong stand!