தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் தனி தொகுதி. இங்கு தி.மு.க சார்பில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ இளமதி சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யபாரதி, த.வெ.க சார்பில் பிரபாகரன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். அனைத்து வேட்பாளர்களும் தொகுதிக்குள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், ஆடுதுறை பேரூராட்சியில் தொடங்கி கோவிந்தபுரம், வண்ணக்குடி உட்பட 12 கிராமங்களில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வெயில் கடுமையாக அடித்ததால் வெப்பம் அதிகமாக இருந்தது. போகப் போக வெயில் அதிகமானதால் வண்ணக்குடியில், பிரசாரம் செய்துகொண்டு இருந்த இளமதி சுப்பிரமணியன் வெயில் தாங்க முடியாமல் திடீரென மயங்கினார். அங்கிருந்த நிர்வாகிகள் அவரை, ஆடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர், வெயில் தாக்கத்தால் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது என்றதுடன் அதற்கேற்ப சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா, முன்னாள் திமுக எம்.பி ராமலிஙகம் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து கொண்டு இருந்தனர். கோவி.செழியனுக்கு, இளமதி சுப்பிரமணியன் மருத்துவமனையில் அட்மிட் ஆன தகவல் தெரிய வர உடனே வாக்கு சேகரிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, அனைவருடனும் மருத்துவமனைக்குச் சென்று அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனிடம் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, கோவி.செழியனுக்கு வணக்கம் வைத்து நன்றியை வெளிப்படுத்தினார் இளமதி. இந்த சம்பவம் திருவிடைமருதூர் தொகுதியில் பேசு பொருள் ஆனது. பிரசாரங்களில் இரு கட்சியினரும் கடுமையாக விமர்சித்து கொள்கின்றனர். அரசியல் ரீதியாக எதிர் எதிராக இருந்தாலும் அதை பார்க்காமல் ஓடிச் சென்று வகம் விசாரித்த கோவி.செழியனின் அரசியல் மாண்பை பலரும் பாராட்டினர். இது குறித்து இளமதி சுப்பிரமணியன் கூறியதாவது, “எனக்கு சாதாரண தலைச்சுற்றல் தான். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு, தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.