சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் என்.டி.ஏ கூட்டணிக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “தி.மு.க-வினர் தங்களின் ஊழல் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தி.மு.க-வின் சொந்த கவுன்சிலர்கள் மற்றும் இளைஞரணி தலைவர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் மீது, கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 8,900 கொலைகள் நடந்துள்ளன. இரண்டு லாக்கப் மரணங்கள் இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளன. நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தாக்கப்படுகிறார்கள். ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தலைமையில் தமிழக மக்களுக்கு, குறிப்பாக தமிழகத்தின் மகள்களுக்கும் சகோதரிகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தி.மு.க அரசு மத்திய அரசின் திட்டங்களைக் கூடச் செயல்படுத்துவதில்லை. ஏழை எளிய மக்களுக்காக ஒன்பது லட்சம் வீடுகளை நாங்கள் அனுமதித்தோம். ஆனால், மூன்று லட்சம் வீடுகள் இன்னும் ஏழைகளுக்கு ஒதுக்கப்படாமல் உள்ளன. மத்திய அரசு திட்டங்களால் பயனடைய வேண்டிய ஏழை மக்கள் மீது ஸ்டாலின் அரசுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
இதற்கு நேர்மாறாக, மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள NDA கூட்டணி, ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நசுக்கப்பட்ட பிரிவினரின் நலன் மற்றும் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம்.

எனவே, கோயம்புத்தூர் மற்றும் இந்தப் பகுதி மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி, அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, அ.மு.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள்.
இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியைக் கொண்டு வருவோம். தமிழகத்தை ஒரு முன்னேறிய மாநிலமாக மாற்றுவோம்.” என்றார்
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.