நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி புதிய நீதி கட்சி சார்பாக போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கபட்டிருந்தது. அதில் ஒரு தொகுதியாக மதுரை மத்தி என நேற்று அறிவிப்பு வெளியானது.
புதிய நீதிக்கட்சி சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் தான் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக இயக்குநர் சுந்தர். சி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் கூறப்படுகிறது.
அரசியலில் `சுந்தர்.சி’ காரணம் என்ன?
கடந்த மாதம் மதுரை வண்டியூரில், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின், ஏ.சி.எஸ் அறக்கட்டளை சார்பில் 140 அடி உயர சுதந்திரப் போராட்ட வீரர், வ.உ.சிதம்பரத்தின் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. இதில் இயக்குநர் சுந்தர்.சி கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசும் போது, “சுந்தர்.சி என்பது என்னுடைய பெயர். இதில் இருக்கும் சி என்பது என்னுடைய அப்பாவின் பெயரான சிதம்பரம்பிள்ளை என்பதை குறிக்கும்” என பேசியிருந்தார். மேலும் ஏ.சி.சண்முகமும் தானும் நண்பர்களாக இருப்பதாகவும் சுந்தர்.சி மேடையில் பேசியிருந்தார். இதன் பின்னணியில் தான் சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பிடிஆருடன் மோதும் சுந்தர்.சி?
பலமான வேட்பாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களை வேட்பாளராக நிறுத்துவது பாஜகவின் பாணி. இதன் மூலம் பிரபலமான நபரை பற்றியே ஊடகங்களும், மக்களும் பேசுவார்கள்அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பற்றி மக்களிடம் பேச்சு இருக்காது என்பது தான் இதன் பின்னால் உள்ள தேர்தல் யுக்தி.
செல்வாக்கான நபர் என்பதால் புதிதாக மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்காது, அறியப்பட்ட பிரபலம், திரை கவர்ச்சி ஆகியவற்றால் வாக்குகள் கிடைக்கும் என்பதற்காக இப்படியொரு யுக்தியை வடமாநிலங்களில் பாஜக செய்து வருகிறது. அந்த பாணியை தற்போது மதுரை மத்திய தொகுதியில் செயல்படுத்தியுள்ளனர்.

மதுரை மத்திய தொகுதியின் எம்.எல்.ஏ-வாக அமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கூட்டணி கட்சி வேட்பாளரே களமிறங்கினார். இம்முறையும் திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனே போட்டியிடுவார் என சொல்லபடுகிறது.
திமுகவில் மிகவும் பிரபலமான நபர், பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக டஃப் கொடுக்கும் வேட்பாளாரை களமிறக்கினால் மட்டுமே போட்டியும் கடுமையாகும். இதனால் இம்முறை பிடி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக சுந்தர்.சி களமிறக்கபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொகுதியில் பிள்ளைமார் சமூக வாக்குகளும் பரவலாக உள்ளன. அதை குறி வைத்தும் சுந்தர்.சியை களமிறக்கபட்டிருக்கலாம் என சொல்லபடுகிறது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது சுந்தர்.சிக்கு பிளஸ்ஸாக பார்க்கபடுகிறது. தற்போதைய நிலையில் மதுரை மத்திய தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியிருக்கிறது.!
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.