தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026-ஐ வெளியிட்டார்.
ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி தேர்தல் ஆணயம் அறிவித்த உடனே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் சட்ட விரோதமாகப் பணப் பரிவர்த்தனை நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், வியாபாரிகள், மருத்துவ செலவுக்காகக் கொண்டு செல்லும் நோயாளிகள் போன்றோர் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக செய்திகள் வெளியானது. எனவே, பல்வேறு தரப்பினரும் ரூ.50,000 மேல் பொதுவெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்,“பொதுமக்கள் மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 மேல் பணம் எடுத்து சென்றால், அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம். மேலும், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்கிறோம். சோதனையின்போது, பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நகர்ப்புறத்தில் வாக்கு பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. சமூக வலைதலங்களில் வெறுப்பு பேச்சு, பிரசாரம் மேற்கொள்ளப்படுவதை தடுக்க சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறோம்.” எனக் குறிப்பிட்டார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.