தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த மாதம் பசும்பொன்னில் நடந்த கூட்டத்தில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட சசிகலா, ஏற்கெனவே தொடங்கப்பட்ட அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று, தற்போது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளார்.
தற்போது விருப்ப மனு விநியோகம் செய்துவரும் நிலையில், பெரிய அளவில் ஆதரவாளர்கள் வராவிட்டாலும், ஓரளவு விருப்ப மனு அளித்துள்ளனர். மனு அளித்தவர்களில் ஒரு சிலரை சசிகலாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே தெரியும் என்பதால், அவர்களிடம் நேர்காணல் நடத்தாமலே அவர்களை முதற்கட்ட வேட்பாளர்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த வகையில், சசிகலா அறிவிக்கவிருக்கும் வேட்பாளர்கள் இவர்கள்தான் என்கிறார்கள்!
1. திருத்தணி -நரசிம்மன் (முன்னாள் எம்.எல்.ஏ)
2. திருமங்கலம் – ஜீவிதா நாச்சியார் (அமமுக-வில் பயணித்த வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார், அங்கு தனக்கு சீட் கிடைக்காது என்பது தெரிந்ததால், சமீபத்தில் சசிகலா அணிக்கு வந்தார். ஆர்.பி.உதயகுமார் இரண்டு முறை வெற்றிபெற்ற திருமங்கலத்தில் ஜீவிதா நாச்சியாரை நிறுத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம்)
3. நாங்குனேரி அல்லது அம்பாசமுத்திரம் – வெள்ளத்துரை.
காவல்துறை அதிகாரியாக பொறுப்பில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற பின்பும் சசிகலாவின் தீவிர விசுவாசியாக மாறியுள்ள வெள்ளத்துரைதான் தற்போது அரசியல் ஆலோசகர்போல செயல்பட்டு வருகிறார். இவர் நாங்குனேரியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தாலும், இசக்கி சுப்பையாவுக்கு குடைச்சலை கொடுக்க வெள்ளத்துரையை அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.
4. ஆண்டிப்பட்டி – கர்ணன்
5. முதுகுளத்தூர் – பசும்பொன் ராமகிருஷ்ணன்
6. மேலூர் – சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பி.ஸ்டாலின்
7. சிவகங்கை – வழக்கறிஞர் முருகானந்தம்
8. மதுரை மேற்கு – சக்கரவர்த்தி (அஇபுதமமுக-த்தின் நிறுவனரான இவரை செல்லூர் ராஜூவுக்கு எதிராக நிறுத்த உள்ளார்)
9. உசிலம்பட்டி – ஒச்சாத்தேவர் (முன்னாள் போலீஸ்காரர்)
என்று முதல் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கும் சசிகலா, அடுத்து அ.தி.மு.க, அ.ம.மு.க-வில் சீட் கிடைக்காமல் அதிருப்தியாகி தன்னைத் தேடி வருகின்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்து வருகிறாராம்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.