தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பட்டுக்கோட்டை. திமுக கூட்டணியில் இத்தொகுதியை காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு கேட்கின்றன.
காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்படுகின்றன. அக்கட்சியின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு நெருக்கமானவராக இருப்பதால் இவர் தான் வேட்பாளர் என்பது உறுதியாகியிருப்பதாகவும் பரவலாக பேசப்படுகின்றன.
தேமுதிக-வில் அவைத்தலைவர் கே.வி.ஆர்.ராஜரத்தினம் வைட்டமின் செலவு செய்வதற்கு தயாராக இருப்பதால், பிரேமலதா இவருக்காக தொகுதியை கேட்கிறாராம்.

அதே நேரத்தில் திமுக-வில் சுமார் 35 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாகவும் சீட்டுகான ரேஸில் பலர் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த திமுக-வினரிடம் பேசினோம்,
“1996 தேர்தலுக்கு பிறகு கடந்த 2021 தேர்தலில் திமுக இங்கு நேரடியாக களமிறங்கி தொகுதியை கைப்பற்றி, அண்ணாதுரை சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பாஜக எதிர்ப்பால் தொகுதிக்குள் கணிசமாக வசிக்கும், இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருப்பதால் இங்கு மீண்டும் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுகிறது. இதனால் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும்னு ஏகப்பட்ட பேர் தலைமையின் கதவை தட்டி வருகின்றனர்.
விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சூரப்பள்ளம் சொ.விஜயகுமார், ஒன்றிய செயலாளர் பார்த்திபன், மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், பழஞ்சூர் செல்வம், சிட்டிங் எம்.எல்.ஏ அண்ணாதுரை. நகரச் செயலாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் என பெரிய லிஸ்டே போட்டியில் உள்ளது.
இதில் சொ.விஜயகுமார், பார்த்திபன் ஆகியோர் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர். கடந்த 2018ல் வீசிய கஜா புயல் பாதிப்பை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை சூரப்பள்ளம் அழைத்து வந்து ரூ.13 லட்சம் செலவில் 25,000 தென்னங்கன்றுகள் வழங்கும் நலத்திட்ட உதவி நடத்தியதன் மூலம் கவனம் பெற்றவர் சொ.விஜயகுமார். மரத்தான், கைப்பந்து என தொடர்ந்து பல விளையாட்டு போட்டிகளை நடத்தினார்.

கடந்த 2025ல் அமைச்சர் நேரு தலைமையில் ரூ.22 லட்சம் செலவில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தி கட்சியினர் மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார். மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பெயர் போன நேருவே, கபடி போட்டிக்கு விஜயகுமார் செய்திருந்த ஏற்பாட்டில் வியந்து, `உனக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் இருக்குயா’னு முதுகில் தட்டி கொடுத்தாராம்.
தொய்வடையாமல் தொடர்ந்து தன் சொந்த பணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். இவரை போன்றவர் தான் கட்சிக்கு வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் நேரு சொன்னதாக சொல்கிறார்கள். மண்டல பொறுப்பாளர் என்கிற முறையில் நேரு, சொ.விஜயகுமாரை டிக் செய்து விட்டார் என்கிறார்கள். திமுக தலைமையும் உளவுத்துறை மூலம் இவரை விசாரித்துள்ளனர்.
பார்த்திபன் கட்சிக்கு சின்சியராக இருப்பவர். கஜா, கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பில் தன் சொந்த பணத்த செலவு செய்து மக்களுக்கு உதவியிருக்கிறார். சிக்கலான சிகிச்சை போன்ற மருத்துவ உதவிகளுக்கு பலரும் இவரை நாடுகின்றனர். மேல்மட்டத்தில் நல்ல தொடர்பில் இருக்கும் பார்த்திபன் கடந்த 2021 தேர்தலிலே வேட்பாளர் ஆவார் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அண்ணாதுரை வேட்பாளரானது யாரும் எதிர்பார்க்காதது. கட்சியிலும், மக்களுக்கும் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு 128 பக்கம் கொண்ட புத்தகத்தை மேல்மட்டத்தை சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே காட்டினாராம்.
அதைபார்த்தவர்கள் நம்பிக்கையாக இருங்கள் நல்லது நடக்கும் என்றார்களாம். சிபாரிசு இல்லாமல் இருந்தால் மெரிட்டில் தனக்கு சீட் கிடைக்கும் என உழைப்பை நம்பும் பார்த்திபன், முதல்வர் ஸ்டாலின் தனக்கான வாய்ப்பை தருவார் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

மாவட்ட செயலாளராக இருந்த எம்.எல்.ஏ அண்ணாதுரை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜா ஆதரவாளரான பழனிவேல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியை தந்தது. கட்சியில் ஆக்டீவாக இல்லாதவர் மாவட்ட பொறுப்பாளரா என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டன.
இதில் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகவும் அதனால், டி.ஆர்.பி.ராஜா இவரை பவருக்கு கொண்டு வந்திருக்கிறார் என்றனர். இப்போது டி.ஆர்.பி.ராஜா, பழனிவேலுக்கு தொகுதியை பரிந்துரை செய்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் நேர்காணல் நடக்கிறது. இதில் யாருக்கு தொகுதி ஒதுக்குவதற்கு வாய்ப்புள்ளது என தெரிந்து விடும். திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என்பது தான் அக்கட்சியினர் எண்ணமாக உள்ளது. மகேந்திரனுக்காக ராகுல்காந்தி நேரடியாக தொகுதியை கேட்பார். இதனால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பட்டுக்கோட்டை அரசியல் நிகழ்வுகள் இருப்பதாக தெரிவித்தனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.