“உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து எழுந்த புகார்களும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கு தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில், முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை மாற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு, இப்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசின் டி.ஜி.பி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்திற்கு புதிய டி.ஜி.பி- யை இதுவரை தமிழக அரசு நியமிக்கவில்லை. அதற்கு பதிலாக பொறுப்பு டி.ஜி.பி என்கிற அந்தஸ்தில் டி.ஜி.பி வெங்கடராமனை நியமித்து, அவர் மூலம் டி.ஜி.பிக்கான பணிகளை தமிழக அரசு கையாண்டு வருகிறது. அதே போல், கடந்த மாதம் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் ஆசிர்வாத்திற்கும் பதவி உயர்வு அளித்து ஆயுதப்படை டி.ஜி.பி-யாக அவரை நியமித்தனர். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டிருக்கிறது

டேவிட்சன் தேவாசீர்வாதம்

இந்நிலையில் டேவிட்சன் வசம் இருந்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி பதவியை, ஏ.டி.ஜி.பி.மகேஸ்வர் தயாளிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் குற்றச்செயல்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானாமதுரையில் காவல் நிலைய மரணம், துாத்துக்குடியில் பள்ளி மாணவி படுகொலை, வட மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த படுகொலை என பதற வைக்கும் குற்ற செயல்களால் பரபரப்பு ஏற்பட்டது.

“தமிழக காவல்துறை என்ன செய்கிறது?” என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் இருப்பதாக” சமூக வளைதளங்களிலும் பேசுபொருளானது. இதை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக உள்துறை செயலாளர்,பொறுப்பு டி.ஜி.பி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆகியோர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அந்த சந்திப்பில், “தமிழகத்தில் கடந்த காலங்களை விட சாரசரியான குற்ற எண்ணிக்கையின் அளவு குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முழுமையாக காவல்துறை கட்டுபாட்டில் இருக்கிறது” என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். மற்றொருபுறம், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து எதிர்க்கட்சியாக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்று ஆர்பாட்டம், போராட்டம் என அரசுக்கு எதிராக நடக்கும் விசயங்கள் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் குற்றச்செயல்களுக்கு உளவுத்துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்ட தொய்வும் காரணம் என அரசு நினைக்கி்றது.

இந்நிலையில் தான் தமிழக அரசின் உளவுத் துறையில் டி.ஜி.பி என்கிற புதிய பதவியை உருவாக்கி அந்த பதவிக்கு பால நாகதேவி என்கிற அதிகாரியை நியமித்துள்ளார்கள். உளவுத்துறையில் டி.ஜி.பி என்கிற அந்தஸ்தில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பாக டி.ஜி.பி அந்தஸ்தில் தமிழக உளவுத்துறையை அலெக்ஸாண்டர் மற்றும் ராமானுஜம் ஆகிய இருவர் கையாண்டனர். ஆனால் இருவருமே சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவியுடன்,உளவுத்துறை டி.ஜி.பி பதவியை கூடுதலாக கையாண்டனர். தனியாக உளவுத்துறைகென டி.ஜி.பி பதவியை இப்போது தான் தமிழக அரசு ஏற்படுத்தி அதற்கு ஒரு பெண் அதிகாரியையும் நியமித்துள்ளார்கள்.

செந்தில்வேலன்

தற்போது உளவுத்துறை ஐ.ஜி-யாக உள்ள செந்தில் வேலன் வேறு துறைக்கு மாற்றப்படலாம் என்கிற தகவலும் உள்ளது. ஆனால் காவல்துறை வட்டாரங்களிலோ “டி.ஜி.பி பதவியில் பால நாகதேவி இருந்தாலும், அடுத்த கட்டத்தில் ஐ.ஜி-யாக செந்தில் வேலன் தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால் தமிழகத்தில் தேர்தல் வேறு வர இருப்பதால் மூன்று ஆண்டுகள் ஓரே துறையில் உள்ள அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நெருக்கடி கொடுக்கும் என்பதால் அதற்கு முன்பாகவே செந்தில்வேலனுக்கு வேறு துறையை ஒதுக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. உளவுத்துறையின் டி.ஜி.பி-யாக பாலநாகதேவி நியமிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு பின்னால் செந்தில் வேலன் உள்ளிட்ட சில அதிகாரிகளின் கரங்களும் உளவுத்துறையை இயக்கும்” என்கிறார்கள் டி.ஜி.பி வட்டாரத்தில் .

தமிழக உளவுப்படைக்கு தலைமை ஏற்றுள்ள முதல் பெண் அதிகாரிக்கு வாழ்த்துகளை சொல்லிவைப்போம்…!


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Final N.R – BJP alliance; Rangasamy challenges Tavek! – Will Vijay whistle in Puducherry?

“Modi’s representative met me to contest in the election” – I.M. Vijayan aspiring to become an MP