`தாக்கக் கூடாது, எங்கள் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்’- போரை முடிக்க ஈரான் விதிக்கும் 3 நிபந்தனைகள்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 12-வது நாளை எட்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதல் வேகம் குறைந்து இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலையில் அமெரிக்கா இருக்கிறது. ஆனால் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று கூறி வருகிறது. அதேசமயம் மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன. இதையடுத்து ஈரானும் இறங்கி வந்திருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ஈரானின் தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மூன்று நிபந்தனைகளை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளமான X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஈரானின் மோதலை முடிவுக்குக் கொண்டு வர, அந்த நாட்டின் நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அத்துடன் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியபோது, பிராந்திய அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். இஸ்ரேலும், அமெரிக்காவும் மூட்டிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பதும், இழப்பீடு வழங்குவதும் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை வழங்குவதுமே ஆகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முன்பாக அந்நாட்டு ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளர் அபுல்ஃபசல் ஷெகர்ச்சி ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், “வாஷிங்டன் ஈரானின் துறைமுகங்களைத் தாக்கினால், பாரசீக வளைகுடாவில் உள்ள எந்தவொரு துறைமுகமோ, பொருளாதார மையமோ அல்லது இடமோ ஈரானின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது. எங்களது துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களும் கப்பல்துறைகளும் எங்களின் நியாயமான இலக்குகளாக மாறும். ஈரானிய துறைமுகங்கள் தாக்கப்பட்டால் இதுவரை நாங்கள் செய்ததை விடவும் மிகவும் கடுமையான தாக்குதலை ஆயுதப்படைகள் நடத்தும்” என்று அவர் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான போர் அந்நாட்டின் மதகுருமார்கள் நடத்தும் ஆட்சியை வீழ்த்தும் என்பதற்கு நிச்சயமில்லை என்றும், கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியிலும் மக்கள் கிளர்ச்சிக்கான அறிகுறி இல்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் சூழலில் ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டன.

மால்டா நாட்டின் கொடியுடன் சென்ற ஒரு கப்பலும், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற ஒரு கப்பலும் தாக்கப்பட்டது. இதில் கப்பல் தீப்பற்றி எரிகிறது. இத்தாக்குதலில் ஒரு இந்திய மாலுமி உயிரிழந்தார். மேலும் 38 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் அரசு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஈரானிய தற்கொலை படகு இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒன்று அமெரிக்க கம்பெனிக்கும், மற்றொன்று கிரேக்க கம்பெனிக்கும் சொந்தமானது ஆகும். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈராக் தனது அனைத்து எண்ணெய் முனையங்களின் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Vehicles crowded at petrol pumps; people carrying water bottles and cans – Spot Visit

Is there a shortage of petrol and diesel? Is there enough stock? – Explanation from the President of the Tamil Nadu Petroleum Dealers Association