பிரதமர் மோடி – ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. அதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு ஸ்டால் அமைத்து, தங்கள் தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது.

இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், `ஓரியன் என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது.

இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் மிக்கது’ என்றார். அந்தப் பேட்டி வைரலான நிலையில், அது தங்கள் நாட்டின் தயாரிப்பு என்றும் சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்றும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.

அதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலக அரங்கில் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அதன் தொடர்ச்சியாக ஏ.ஐ மாநாடு நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கில் சட்டையைக் கழற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

அந்த செயலை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க சார்பில், நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேபோல பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.க.வின் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போலீஸார் பேரிகார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது பா.ஜ.க அலுவலக வாசலில் உருட்டுக்கட்டை, தடியுடன் நின்றிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ்காரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது இருதரப்பினரும் கல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர்.

அதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Trump Tariff: US Supreme Court cancels the tax – How much tax for India? | Decode | Vikatan

How will Trump’s new 10% global tax work? – 4 questions and answers