நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “தமிழக முதல்வர் சட்டப்படி ஆட்சி நடத்தி வருகிறார். பல மாநிலங்களில் ஆளுநரை அழைக்காமலேயே சட்டமன்றம் நடத்தப்படுகிறது.
நமது முதல்வர் அதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார். இவ்வாண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுப்போம். அவர் வருவார் என நம்புகிறோம்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அதுபோன்று தமிழகத்திலும் நடந்து கொள்ள வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை காங்கிரஸும், தி.முகவும் கொண்டு வந்தது என்ற கோபத்தில் மத்திய அரசு பார்க்கிறது.
நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 42 கோடி மக்கள் பயன்பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டு வந்தது. இதில், தமிழகத்தின் பங்காக ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும். தற்போது இந்தத் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடிதான் கொடுப்பேன் என்றால் எப்படி வரவேற்க முடியும்?
பா.ஜ.க ஆட்சி அல்லாத மாநிலங்களுக்கு கல்வித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியைக் கொடுக்காமல் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. ரயில்வே கட்டண உயர்வைப் பொறுத்தவரையில் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதுதான் மத்திய அரசின் வேலையாக உள்ளது.
தீக்கொளுத்தும் வேலையைத் தவிர மத்திய அரசு மக்களுக்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

ஏழை மக்களுக்கான எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அணுசக்தி நிலையங்களை நிர்வகிப்பதையும், பராமரிப்பதையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவால், பொதுமக்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் அதிகளவில் புற்றுநோய் பரவி வருகிறது. மத்திய அரசின் தற்போதைய முடிவால் நாடு முழுவதும் புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.