“விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்” – திருமாவளவன் விமர்சனம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவெறி அரசியலைக் கண்டிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்

அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசும்போது, “எதை வைத்தாவது அரசியல் செய்து சமூக பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேடுவதே அந்தக் கும்பலின் நோக்கம்.

மதுரையில் அரசை எதிர்த்துப் போராடுவதற்கு எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன, இந்துக்களின் உண்மையான தேவைகளுக்காக எந்த இந்து அமைப்புகளும் இதுவரை போராடியதில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக உறுதியளித்து 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுள்ளார்கள், திமுக அரசு போராடிய பின்னரே வேலையைத் துவங்கினார்கள். ஆனால், இதற்காக இந்து அமைப்புகள் என்றாவது போராடியது உண்டா?

பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டு வருமாறு திமுக அரசுக்கு எதிராக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் போராடினீர்களா? நாட்டின் சொத்துகளையெல்லாம் தனியாருக்கு விற்பனை செய்வதுதான் உங்கள் தேசியவாதமா? நாட்டின் சொத்துகள் சில தனி நபர்களுக்கு உடமையாக இருக்கும்போது, நீங்கள் விரும்புகிற இந்து தேசியத்தை எப்படி உருவாக்க முடியும்?

தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்

பாஜக ஆளும் எந்த மாநிலங்களில் இந்துக்கள் கல்வியில் வளர்ந்திருக்கிறார்கள்? ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினரால் பாதிக்கப்படப்போவது இந்துக்கள்தான். அவர்கள் கட்டமைக்க விரும்புவது இந்து ராஷ்டிரம் அல்ல, பார்ப்பன ராஷ்டிரம். அண்ணாமலையும், நயினாரும் இந்துக்களுக்குத்தான் உண்மையில் எதிராக இருக்கிறார்கள்.

குமரன் என்பதை சுப்பிரமணியன் என மாற்றிவிட்டார்கள், சுப்பிரமணியருக்கு இன்னொரு பெயர்தான் ஸ்கந்தன். முருகன் என்ற பெயரை வைத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்கள் ஏன் தயங்குகிறீர்கள்? தமிழ்க்கடவுள் முருகன் எப்படி சமஸ்கிருதம் பேசுகிறவர்களுக்கு கடவுளாக முடியும்?

முருகன் என்ற பெயரைச் சொல்வதற்கே ஹெச்.ராஜாவுக்குத் தகுதியில்லை. எந்த வகையில் அவருக்கு முருகன் சொந்தமாக முடியும்? தமிழ்நாட்டில் ஒருபோதும் உங்கள் ஜம்பம் பலிக்காது.

ஆர்ப்பாட்டத்தில்
ஆர்ப்பாட்டத்தில்

நீதிமன்றம் நிபந்தனை விதித்த போதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். தர்காவை இடிப்பதுதான் அவர்களது நோக்கம். ஓட்டுப் பொறுக்குவதற்காக அரசியலுக்கு வரவில்லை. நாளையே விசிக இருப்பது பிரச்னை என திமுக கருதினால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம், ஐ டோண்ட் கேர்…

பூர்ணசந்திரன் குடும்பத்தினர் விழிப்பாக இருந்து, நீங்கள் அரசியல் செய்யுமிடம் இதுவல்ல என இந்து அமைப்புகளை விரட்டியுள்ளார்கள். திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது, உ.பி-யில் இருப்பதைப்போல அல்ல, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி விட்டால் கல்வி, சோறு எல்லோருக்கும் கிடைத்து விடுமா? எய்ம்ஸ் வந்து விடுமா? அது சர்வே கல், நாயக்கர் காலத்தில் நடப்பட்ட அளவைக் கல். உச்சி பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தூணில்தான் 400 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை. சங்கிகள் நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறையில் இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இந்துக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. அது பிராமணர்களால், பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அண்ணாமலை, நயினார், தமிழிசை, பொன்னார் புரிந்துகொள்ள வேண்டும். பிராமண கடப்பாறையைக் கொண்டு திராவிடத்தை இடிப்போம் எனச் சொன்ன சீமான், தமிழ் தேசியம் பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள்.

இப்போது இருவரை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். திமுக ஒரு தீய சக்தி என்கிறார் விஜய். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்-காகத்தான் விஜய் கட்சித் துவங்கியிருக்கிறார், தமிழ்நாட்டு மக்களுக்காகத் துவங்கவில்லை.

திமுகவை மட்டுமல்ல பெரியார், அம்பேத்கர் பேசிய அரசியலை வீழ்த்துவதற்காகப் பேசுகிறீர்கள். விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>மாதாந்திர ‘மகளிர் உதவித்தொகை’ பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது?</div>

Does applying kohl heal facial skin? What is in kohl?