புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது அறந்தாங்கி தொகுதி. வங்காள விரிகுடா கடற்கரையையொட்டியுள்ள இந்தத் தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.
இவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரின் மகன். தி.மு.க கூட்டணியில் இந்த முறையும் தனது மகனுக்காக திருநாவுக்கரசர் சீட் கேட்டு இப்போதிலிருந்தே காய் நகர்த்தி வருகிறார். ஆனால், ‘தி.மு.க-வுக்குச் சாதகமான இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு இந்த முறை விட்டுத் தரமாட்டோம். காங்கிரஸுக்கு ஒதுக்கினால் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்போம்’ என்று தி.மு.க முக்கியப் புள்ளிகள் வெளிப்படையாகப் பேசி வருவது தி.மு.க கூட்டணிக்குள் திகுதிகுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க சார்பில் மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி சீட் பிடிக்கும் ரேஸில் முதன்மையாக இருக்கிறார். இன்னொரு பக்கம், அவருக்குப் போட்டியாக சீட் கேட்டு தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளரும், மணமேல்குடி முன்னாள் ஒன்றிய சேர்மனுமான பரணி கார்த்திகேயன் டஃப் ஃபைட் கொடுத்து வருகிறார்.
இவர்களைத் தவிர, முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளருமான ‘உதயம்’ சண்முகமும் சீட் பெற கடுமையாக முயன்றுவருகிறார்.
அதேநேரம், அ.தி.மு.க-க்கும் கடந்த காலங்களில் வெற்றிகளைக் கொடுத்த தொகுதி என்பதால், அங்கும் இந்தத் தொகுதியில் சீட் பெற கடுமையான போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜநாயகம் சீட் கேட்கிறார். அதேநேரம், தொகுதி முழுக்க நன்கு அறிமுகம் உள்ள ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய மகளிரணி செயலாளர் உமையாள் பால்துரை சீட் பெறும் ரேஸில் முதன்மையாக உள்ளார்.
கொரோனா காலத்தில் செய்த உதவிகள், கட்சி செயல்பாடுகளில் பம்பரமாகச் சுழலும் தன்மை உள்ளிட்ட அம்சங்களால் அவருக்கு வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.பெரியசாமி, அறந்தாங்கி நகர செயலாளரான ஆதி.மோகனகுமார், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கூத்தையன், ஆவுடையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஒன்றிய சேர்மனுமான நரேந்திரஜோதி ஆகியோரும் கடுமையாக சீட் பெற முயல்கிறார்கள்.
இந்நிலையில், இந்தத் தொகுதி நிலவரம் குறித்து அறிந்த விபரப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
“அறந்தாங்கி தொகுதியில் அதிகமுறை வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர்தான். கடந்த தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கி ஜெயிக்க வைத்தார். இந்த முறையும், தொகுதியை தனது மகனுக்குத் தக்க வைக்க வேண்டும் என்று பல வழிகளில் முயல்கிறார். ஆனால், தி.மு.க-வினர் அதற்கு எதிராகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதையும் மீறி அவர் எப்படி சீட் வாங்கப் போகிறார் என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாக இருக்கிறது. அதேபோல், அ.தி.மு.க கூடாரத்திலும் சீட் பிடிக்க ஆளாளுக்குக் கடும் போட்டி போடுகிறார்கள்.

இந்தத் தொகுதியைப் பொறுத்தமட்டில் விவசாயிகள், மீனவர்கள் நிறைந்த தொகுதி. விவசாயம் சார்ந்தோ அல்லது மீனவர்கள் சார்ந்தோ இதுவரை இந்தத் தொகுதியில் பதவியை அலங்கரித்தவர்கள் பெரிதாக எந்தத் திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அதனால், யாருக்கு சீட் கிடைத்தாலும் இந்த விஷயங்களை முன்வைத்து பிரதான வாக்குறுதிகள் கொடுப்பவர்களுக்கே தொகுதி மக்கள் வாக்களிக்க விருப்பம் காட்டுவார்கள்” என்றார்கள்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.