“மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்” – குமரியில் விஜய் வாக்குறுதி

கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். மகாதானபுரம் சந்திப்பில் சைக்கிளில் வலம் வந்து தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் கன்னியாகுமரி சீரோ பாயிண்ட். வரை ரோடு ஷோ நிகழ்த்தினார்.

மகாதானபுரம் மற்றும் சீரோ பாயிண்ட் பகுதிகளில் விஜய் பேசுகையில், “இந்த வெப்பத்துல எனக்காக நீங்க வந்திருக்கீங்க. உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். இங்கு சில விஷயங்களை நான் அறிவிக்கலாம் என இருக்கிறேன். ​

லஞ்சமில்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் போய் சேரும். ​அதற்கெனத் தனியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டைப் போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும்.

​ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றிய அனைத்து தரவுகளும் அதில் இருக்கும். பிறப்பிலிருந்தே ஒவ்வொரு மனிதருக்கு உரிய திட்டப் பலன்கள் போய் சேரும்.

​விண்ணப்பிக்கத் தேவையில்லை. லஞ்சம் கொடுத்து வேதனை அடையத் தேவையில்லை. வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் வந்து சேரும். ஏ.ஐ உதவியுடன் இதற்கான தரவுகள் சாத்தியமாக்கப்படும்.

​இது ஏதோ ஸ்டாலின் சார் விடுற கதை மாதிரி இல்லை. அறிவியல்பூர்வமா சாத்தியமான ஒண்ணுதான் இப்போ நான் சொல்லிட்டு இருக்கேன். அதை நம்ம த.வெ.க ஆட்சி உருவாக்கி காட்டும்.

​இதுவரைக்கும் இந்த கவர்மெண்ட் சிஸ்டத்துல, ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்க்குப் போய் ஒரு வேலை செஞ்சு குடுக்க சொல்லி கேட்டீங்கன்னா, ‘இவங்கள பாரு, அவங்கள பாரு, இப்ப வா, அப்புறம் வா, இந்த டாக்குமெண்ட் சரி இல்ல, அந்த டாக்குமெண்ட் சரி இல்ல’ன்னு இழுத்தடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அப்படி இழுத்தடிக்கிறதுக்குக் காரணம் டாக்குமெண்ட்ஸ் இல்ல, டப்பு டப்பு… லஞ்சம். இப்படிப்பட்ட ஒரு சிஸ்டம் பேரு குட் கவர்னன்ஸ் இல்ல, ஹராஸ்மென்ட்.

நிர்வாகி கொடுத்த வில் அம்புடன் விஜய்
நிர்வாகி கொடுத்த வில் அம்புடன் விஜய்

நமது அரசு அமைந்த ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும். ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்’ உருவாக்கப்படும். அதில் டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, பர்த் சர்டிபிகேட் முதல் கம்ப்ளைன்ட் ஃபைலிங் வரை அனைத்தும் உங்கள் உள்ளங்கையிலேயே இருக்கும்.

​அடுத்தது, தமிழக அரசின் பட்ஜெட் வெறும் ஆவணமாக மட்டுமே நமக்குத் தெரியும். அதில் ஒவ்வொரு திட்டத்திற்காகவும் ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது, யாரைச் சென்றடைகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. அது ஒரு சிதம்பர ரகசியம் போல ஸ்டாலின் சார் ரகசியமாகவே வைத்திருக்கிறார். ஆனால் நாம் அதை மாற்றுவோம். ​

அடுத்தது, சிட்டிசன் அஸ் பார்ட்னர்ஸ் இன் கவர்னன்ஸ் என்ற இணையதளம் உருவாக்கப்படும். பொதுமக்கள் அரசின் பங்காளர்களாக இருப்பார்கள். மக்கள் அரங்கம் என்ற திட்டத்தின் மூலம் டிஜிட்டல் தளம் வழியாக நேரடியாக சட்டமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்க முடியும்.

10,000 கையெழுத்துகளுடன் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டால், அரசு அதிகாரப்பூர்வ பதில் அளிக்க வேண்டும். 5 லட்சம் கையெழுத்துக்கள் இருந்தால் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.

தமிழ்நாடு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தலைநகராக மாறும். ஏ.ஐ சிட்டியை த.வெ.க அரசு உருவாக்கும். மதுரை, கோவை, சேலம் மற்றும் திருச்சியில் 1000 டீப்-டெக் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும். இதற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகத்தை த.வெ.க உருவாக்கும்.

விஜய்யைக் காண குந்த ரசிகர்கள்
விஜய்யைக் காண குந்த ரசிகர்கள்

​கடைசியாக, தமிழ்நாட்டின் நிதி நிலைமை. நமது மாநிலத்தின் கடன் 10.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நாம் வாங்கியதை விட இந்த 5 ஆண்டுகளில் அதிகமாக கடன் வாங்கப்பட்டுள்ளது. வட்டிக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நம் பிள்ளையின் கல்வி, நம் குடும்பத்தின் மருத்துவம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட ஒரு ரூபாய்க்குச் சமம்.

​மக்களிடமிருந்து வரியாக ஒரு ரூபாய் கூட கூடுதலாகப் பெறாமல், அதிக வருவாய் ஈட்டி, குறைவாகச் செலவிட்டு புதிய வருவாய் வழிகளை உருவாக்குவதே நமது இலக்கு. ​இப்படி ஒரு ஆட்சி நமக்கு வேணும்தானே? இதுவரைக்கும் நம்மள ஏமாத்துன இந்த அனுபவசாலிகள் ஆட்சி போதும்தானே? ​

ஏப்ரல் 23-ஆம் தேதி எல்லாரும் ரெடியாகிட்டு, வீட்டுல இருக்குற சாமி எல்லாம் நல்லா கும்பிட்டுக்கங்க. நண்பர்கள், தோழர்கள் எல்லாத்தையும் கூட்டிக்கிட்டு சந்தோஷமா முதல் ஆளா பூத்-ல போய் நின்னு அந்த விசில் சின்னத்துக்கு நேரா இருக்குற பட்டனை ஒரு அமுக்கு அமுக்குங்க!

​இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா, மக்களை நேசிக்கிற உங்க விஜய் வேணுமா? அதுதான் இந்தத் தேர்தலே! அதனால உங்க பிள்ளைக்கு, உங்க அண்ணனுக்கு, உங்க தம்பிக்கு ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க.

கன்னியாகுமரியில் விஜய் ரோடு ஷோ
கன்னியாகுமரியில் விஜய் ரோடு ஷோ

மீன்பிடி தடைகாலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூபாய் 8,000-லிருந்து ரூபாய் 20,000-ம் ஆக உயர்த்தப்படும். சிறைபிடிக்கப்படும் படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை படகு உரிமையாளர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உடனடி இடைக்கால நிவாரணமும் வழங்கப்படும்.

கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும், சிதிலமடைந்த குடியிருப்புகளையும் அகற்றி, புயல்களைத் தாங்கக்கூடிய, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வீடுகளைக் கட்டுவதற்காக ஒரு தனி வீட்டு வசதித் திட்டம் உருவாக்கப்படும்.

இயந்திரப் படகுகளுக்கான மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீடு 1,800 லிட்டரிலிருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு ரூபாய் 15 என்ற நிலையான மானியம் படகு உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

​இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள்தான். இது ஏதோ தேர்தலுக்காக தி.மு.க மாதிரி வாயில வடை சுடுவது கிடையாது. உண்மையா உங்களை நேசிக்கிறதோட அதனுடைய வெளிப்பாடு. இப்படித்தான் நான் உங்களை உண்மையா நேசிக்கிறோம். ​எல்லாரும் நான் சொன்ன மாதிரி விசில் சின்னத்துக்குத் தயவு செஞ்சு ஓட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்கணும். கான்ஃபிடென்ட்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

Is Sasikala a decisive force in Tirunelveli district? | IPS On Road | #61

Why did star-studded Mumbai suffer a hat-trick of defeats? Questions arise about the captaincy.