புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் தற்போது நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முழுமையாக ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் புதுச்சேரி மாநில மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
நில அபகரிப்புகள் தடுக்கப்படும். பொதுமக்களுக்குத் தொல்லை தரும் ரௌடிகள் சிறையில் தள்ளப்படுவார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுவது தடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புவதுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
இந்த ஆட்சியில் முட்டை தொடங்கி பசுமாடு வாங்குவது வரை நடைபெற்ற ஊழல்களைப் பட்டியலிட்டுச் சொன்னோம். ஆனால் இந்த ஆட்சியில் எந்த அமைச்சரும் அதற்குப் பதிலளிக்கவில்லை.
எங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறுகிறார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் எங்கள் ஆட்சியில் அரும்பார்த்தபுரம் பாலம் கட்டியதில் தொடங்கி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம்.
போலி மருந்துகளில் நடைபெற்றிருக்கும் ஊழலால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதேபோல குப்பை அள்ளுவதில் நடைபெற்றிருக்கும் ஊழல் இமாலய ஊழல். எங்கள் ஆட்சியில் குப்பை அள்ளுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள்தான் ஒப்பந்தம் வழங்கினோம்.
ஆனால் இவர்கள் 19 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல நாங்கள் ஒரு டன் குப்பை அள்ளுவதற்கு 1,800 ரூபாய்தான் கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் 4,500 ரூபாய் கொடுக்கிறார்கள்.
இப்படி அனைத்திலும் ஊழல்தான். அதனால் இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். பட்டியல் சமூகத்தினருக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல் இதுவரை ஆட்சி நடைபெற்றதே இல்லை.

இந்த ஆட்சியில் இரண்டு பேர் பட்டியல் சமூகத்தினர் சார்பில் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களை ராஜினாமா செய்ய வைத்து 17% மக்கள் தொகையைக் கொண்ட பட்டியல் சமூக மக்களுக்கு, அமைச்சரே இல்லாமல் ஆட்சி நடத்தி துரோகம் செய்து கொண்டிருக்கிறார் ரங்கசாமி.
அதேபோல அந்த மக்களுக்கான சிறப்புக்கூறு நிதியை எடுத்து இலவசங்களை வழங்கி, அவர்களை வஞ்சித்து வருகிறார். போலி மருந்து வழக்கில் 10,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது.
அதில் முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சி.பி.ஐ விசாரணை நடைபெறவில்லை” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.