கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்திய துணைக்கண்டத்தின் தொடக்கமான வள்ளுவமுனை அமைந்துள்ள குமரி முனைக்கு வந்துள்ளேன். உணவு, வட்டார வழக்கு, கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு நிறைந்திருக்கும் மாவட்டம். எல்லை போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி, என்.எஸ்.கிருஷ்ணன், தோழர் ஜீவா, தேசிய விநாயகம் பிள்ளை என பல பேருவமைகளை கொண்டுள்ள தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
குமரிக்கு இதெல்லாம் செய்துள்ளோம்!
இஸ்ரோவுக்கு எத்தனையோ தலைவர்களை கொடுத்த மாவட்டம். இங்கு மிகசிறப்பாக விழாவை ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். பால்வளத்துறையை சிறப்பாக கவனித்துவரும் வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர் அவர். 3,12,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் குறிப்பிட்டு சொல்லும்படியாக அவரது செயல்பாடு அமைந்துள்ளது. அவருக்கு துணையாக நிற்கும் அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நேற்று இலங்கை தமிழர்கள் குடியிருப்பு, திருவள்ளுவர் வெள்ளிவிழா வளைவு, தியாகி பொன்னப்பநாடார் சிலை ஆகியவற்றை திறந்துவத்தேன். எல்லைப்போராட்ட வீரர் மார்ஷல் நேசமணியின் போர்ப்படை தளபதியாக இருந்தவர் பொன்னப்பநாடார். எளிமையாக இருந்து ஏழைகளுக்காக செயல்பட்டவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் அவரது வெண்கலச்சிலை திறந்துவைத்ததில் பெருமைப்படுகிறேன். கலைஞரின் சிலை, எனது பெயரில் படைப்பகம் ஆகியவற்றை நாகர்கோவில் முதல் மேயர் மகேசின் சிறப்பான ஏற்பாட்டில் திறந்துவைத்தேன்.
2025 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நான் குமரி மாவட்டம் வந்தேன். பேரறிவுச்சிலை வெள்ளிவிழாவை கொண்டாடினோம். கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தேன். 2026-ல் திராவிடமாடல் 2.0 அமைவதற்கு முன் நான் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிலம் கையகப்படுத்தி வீடு கட்டிக்கொடுத்தாலும் அரசு நிலம் என இருந்தது. அவர்களுக்கு இன்று பட்டா வழங்கப்படுகிறது. 40,086 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். தூண்டில் வளைவுகள், மீன் இறங்குத்தளங்கள், வலைபின்னும் கூடங்கள், மீன் ஏலக்கூடங்களை குமரி மீனவர்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். இதன்மூலம் 1,47,360 மீனவர்கள் பலனடைந்துள்ளனர். குளச்சல் மீன்பிடித்துறைமுக விரிவாக்கம்,
வாணியக்குடியில் புதிய மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாயில் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளோம். குளச்சலுக்கும் வாணியக்குடிக்கும் 3 கி.மீ தொலைவுதான் இடைவெளி. மீனவ பெருங்குடி மக்கள் கேட்டதால் துறைமுகத்தை செய்துகொடுத்துள்ளோம். மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரணாம் 5000 ரூபாயில் இருந்து 8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோட்டாறு சவேரியார் ஆலயத்தை சீரமைக்க 2.29 கோடி, நாகர்கோவில் மாநகராட்சியில் குடிரநீர் இணைப்பு. சுசீந்திரம், தேரூர் குளங்கள் ராம்சார் குறியீடு, இலங்கை தமிழர்களுக்கு 762 வீடுகள், தோவாளை மலர் சந்தையில் உயர்மட்ட கூடம்,
அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 9 புதிய கட்டடங்கள் மற்றும் ஸ்கேன் மிஷின். பத்மநாபபுரம் மருத்துவமனையில் மத்திய ஆய்வகம்,
சுற்றுலாத்துறைக்காக சிற்றார் 2 அணை, திற்பரப்பு அருவி மற்றும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சிப்பணிகள், வடசேரியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்காக அடிக்கல், நியூ டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. குமரியின் எல்லா பகுதிகளுக்கும் வளர்ச்சிப்பணிகளை கொண்டுவந்துள்ளோம்.
புது அறிவிப்புகளை வெளியிடாமல் போனால் நன்றாக இருக்காது. அதிலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை சும்மா இருக்கமாட்டார்கள். கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள். உரிமையோடுதான் அவர்கள் கேட்பார்கள். எனவே குமரிக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கன்னியாகுமரியில் பழையாற்றில் இருந்து கூடுதல் குடிநீர் வழங்க 28 கோடியில் புதிய திட்டம். அங்கு 25 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்தீகரிப்பு நிலையம். குளச்சல் நகராட்சி மண்டைக்காடு பேரூராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1.20 கோடி மதிப்பில் ஏ.வி.எம் கால்வாய் புனரமைக்கப்படும்.
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் 9 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். முளகுமூடு மரியன்னை பசிலிக்கா 2 கோடியில் புனரமைக்கப்படும்.
தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் கல்வி, திருமண நிதி உதவிகள் அதிகரித்து வழங்கப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல்போகும் மீனவர்கள் இறந்தால் காப்பீடு கிடைக்கும் வரை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதுதான் திராவிடமாடல் ஆட்சி.
தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய கல்வி, தனித்திறன் பயிற்சிகள், உட்கட்டமைப்பு வசதிகள், சாலை, தொழில் நிறுவனங்கள், தொழில் தொடங்க மானியம், கட்டணம் இல்லா பேருந்து, மகளிர் உதவித்தொகை ஆகியவைகள்தான் திராவிடமாடல் ஆட்சி. ஒவ்வொரு நாளும் நான் ஏதாவது ஒரு திட்டத்தை நான் தொடங்கிவைத்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாடு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள் நாங்கள்தான் என்பதை எங்கள் திட்டங்கள் மூலம் நிரூபித்து வருகிறோம்.

14 வயதில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். 50 ஆண்டு தொடர் உழைப்பால் முதல்வராக உயர்ந்திருக்கிறேன். எம்.எல்.ஏ-வாக, மேயராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக, எதிர்கட்சி தலைவராக தற்போது முதல் அமைச்சராக உள்ளேன். நான் செல்லாத ஊரே இல்லை. மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என அறிந்து புரிந்து செய்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டை நம்பி என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். என் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறேன். வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து உழைத்து வருகிறேன்.
சிலர் தேர்தல் சமயத்தில் மட்டும் உங்களை வடமடிப்பார்கள். தேடி வருவார்கள். தேர்தல் என்பதால் பிரதமர் மோடியும் தமிழ்நாடுக்கு வருவார். ஏற்கனவே வந்துகொண்டிருக்கிறார். அவர் வருவதை நினைத்து அவரது கூட்டணியினர் கலக்கமடைந்துள்ளனர். அவர் வருவதற்கு ஏற்ப அதிக வாக்குவித்தியாசத்தில் என்.டி.ஏ கூட்டணி தோல்வியடையும். இந்த தேர்தலில் தமிழ்நாடு-க்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையேதான் போட்டி.
தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டெல்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது. பாஜக வந்தால் வளர்ச்சி இருக்காது. குமரி மாவட்டத்தில் அனைத்து மத மக்களும் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள். முஸ்லிம்ககுக்கு இட ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டது. மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது. பீகார் துணைமுதல்வர் பள்ளிக்கூடங்கள் அருகில் இறைச்சிக்கடைகள் இருந்தால் அகற்றப்படும் என கூறுகிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என முடிவு செய்வதற்கு அவர்கள் யார்? திராவிட மாடல் அரசில் அனைவரும் சமமாக உள்ளனர்.
வக்பு சட்டதிருத்தத்துக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராகவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். 4000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். இந்த பகுதியைச் சேர்ந்த பாலபிரஜாதிபதி அடிகளார், ‘நம் முதல்வருக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை, மொழி உணர்வு இருக்கிறது என பேசி உள்ளார். அது போன்று வள்ளலார் அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டி உள்ளனர். ஆன்மீக பெரியோர்கள் இந்த ஆட்சியை பாராட்டி உள்ளனர்.

நான் வெளிப்படையாக பாஜக-வினரைப்பார்த்து கேட்கிறேன்… எப்போது வன்முறையையும் வெறுப்பையும் விட்டுவிட்டு வளர்ச்சியைப்பற்றி பேசுவீர்கள். நீங்கள் ஆளக்கூடிய எந்த மாநிலம் தமிழ்நாட்டைவிட சிறப்பாக ஆளுகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்குவது எப்போது நிற்கும். இதைச் சொல்லிதான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்.
அவர்களுக்கு கிடைத்த சரியான நபர்தான் எடப்படி பழனிச்சாமி. நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வடைச்சுட்டது பா.ஜ.க. அதுபோன்று விதவிதமாக வடைசுடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த வடைகளை எல்லாம் தமிழக மக்கள் நம்பும் நிலையில் இல்லை. தேர்தலை முன்னிட்டு மகளிர் உதவித்தொகையை நிறுத்திவிடலாம். அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்திவிடலாம் என நினைத்தார். அதை நான் முன்கூட்டியே தெரிந்து 3 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகையும் சேர்த்து 5000 ரூபாயாக மகளிருக்கு வழங்கிவிட்டோம். நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ரைக்கால் மக்கள் ஹேப்பி, எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்.
முதலில் இதை கொச்சைப்படுத்தி பேசினார்கள். பா.ஜ.க டப்பா எஞ்சினை நம்பி, அ.தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. என்ற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க. வருகிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். ராஜ்ஜியம் கிடைக்காது. நம்ம திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின். 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியுடன் யாரும் எட்டி பிடிக்க முடியாத அளவுக்கு அதிவேகமாக முன்னாடி போயிட்டு இருக்கு. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும். இப்போது நாங்கள் செய்திருக்கும் சாதனைகளை எங்களோட செக்கண்ட் இன்னிங்ஸில் நாங்களே மிஞ்சுவோம்.
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். நாட்டுக்கே வழிகாட்டும் நமது மக்கள்நலத் திட்டங்கள் தொடர தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வெல்வோம் ஒன்றாக. தமிழ்நாடு வெல்லட்டும்” என்றார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.