தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!

தி கேரளா ஸ்டோரி என்ற சினிமா 2023-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த சினிமாவுக்கு கேரளா சி.பி.எம் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் சினிமா வெளியிடப்பட்டது.

கேரள மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்’ (The Kerala Story 2 Goes Beyond) என்ற திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்தப் படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையே அந்தச் சினிமாவின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி இருந்தன.

ஒரு மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது உள்ளிட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ள டீசர் விவாதத்தைக் கிளப்பியது. டீசருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் அந்தச் சினிமாவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை வெளிப்படுத்தும் இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே ‘கேரளா ஸ்டோரி 2’ என்று பெயரிடப்பட்டதாகவும், அது மத ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி
தி கேரளா ஸ்டோரி 2 சினிமா டீசர் காட்சி

பிரிவினை, வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள சினிமாக்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதே சமயம் தி கேரளா ஸ்டோரி -2 சினிமாவுக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தச் சினிமாவின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிலர் கோர்ட்டில் மனு அளித்திருந்தனர்.

படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், டீசரைத் திரும்பப் பெற முடியுமா என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டிருந்தது. டீசர் மற்றும் டிரெய்லரைத் திரும்பப் பெறலாம் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஐகோர்ட் வழக்கு தொடர்பான வாதம் முடியும் வரை, அந்தப் படத்தை வெளியிடக் கூடாது எனவும், திரைப்படத்தைப் பார்த்த பிறகு அடுத்தகட்ட விசாரணை தொடரும் எனவும் ஐகோர்ட் தெரிவித்திருந்தது.

தி கேரளா ஸ்டோரி 2 சினிமா
தி கேரளா ஸ்டோரி 2 சினிமா

இதற்கிடையே படத் தயாரிப்பாளர் தரப்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “இந்தச் சினிமாவை மறுபரிசீலனை செய்ய சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஐகோர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்துவது சரியல்ல. சினிமாவின் பெயரை மாற்ற முடியாது. கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

டீஸரில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த டீஸர் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பிரச்னைகளைக் காட்டுகிறது. தலைப்பில் உள்ள ‘கோஸ் பியாண்ட்’ என்ற வார்த்தை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை” என்று பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கேரளா ஸ்டோரி 2 சினிமாவுக்கு இடைக்கால தடை விதித்து கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சினிமாவின் முதற்கட்ட காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தணிக்கைக் குழு மீண்டும் சினிமாவைப் பார்த்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறிய ஐகோர்ட், சினிமாவை வெளியிட இரண்டு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“What are the conditions for appointing a governor?” – What does the Joseph Kurian Commission say?