“திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்!” – அறநிலையத்துறை

திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே திங்கள் 7 ஆம் நாள் பொறுப்பேற்றது முதல் 22.02.2026 வரை, 20 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு விழாக்கள் நடைபெறாத 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

திருப்பணி

12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 29,479 திருப்பணிகளுள் ரூ.4,346 கோடி மதிப்பீட்டிலான 16,756 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் நன்கொடையாளர் நிதி மூலம் ரூ.2,000.87 கோடி மதிப்பீட்டில் 12,220 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பு அகற்றுதல் / நிலங்கள் அளவீடு

திராவிட நாயகர் ஆட்சியில், 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,436.31 கோடி மதிப்பிலான 8,107.03 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நவீன ரோவர் கருவிகள் (DGPS) மூலம்

2,38,060.24 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு 1,50,221 எல்லைக் கற்கள் நடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திருக்கோயில்களில் திருப்பணி 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி 

கிராமப்புறத் திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதியுதவி ரூ.1 இலட்சம் என்பது ரூ.2.50 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் திருப்பணி

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் திட்டத்தில், அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளர் நிதி, பொதுநலநிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 88 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன.

பெருந்திட்ட வரைவுப் பணி (Master Plan)

திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி

மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் பெருந்திட்ட வரைவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள்

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவிலும், கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தனகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.9.10 கோடி செலவிலும், கம்பிவட ஊர்திகளும், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.5.20 கோடி செலவில் மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளன.

பழனி மலை மற்றும் இடும்பன் மலை இடையே ரூ.90 கோடி மதிப்பீட்டிலும், அனுவாவியில் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், திருநீர்மலையில் ரூ.19.60 கோடி மதிப்பீட்டிலும், திருக்கழுக்குன்றத்தில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டிலும், திருப்பரங்குன்றம் அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.32.18 கோடி மதிப்பீட்டிலும் கம்பி வட ஊர்திகளும், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம்:

2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 12 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு 14 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிடப்படுவதோடு, சுமார் 3.65 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.

தங்க முதலீட்டுத் திட்டம்

இருக்கன்குடி, பெரியபாளையம், சமயபுரம், பழனி, திருவேற்காடு, மாங்காடு மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 21 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்கள் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதியரசர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு 1,074 கிலோ 123 கிராம் தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டு வட்டியாக 17 கோடியே 81 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

ஆன்மிகப் பயணம்

60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.94 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும், மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.40,000-லிருந்து ரூ.1 இலட்சமாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்கள் சார்பில் திருமணங்கள்

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்குச் 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உட்பட ரூ.70,000/- மதிப்புள்ள சீர்வரிசைகளுடன் திருக்கோயில்களின் சார்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.335 கோடியில் ஒருகால பூசை திட்டம்

ஒருகால பூசை கூடச் செய்திட முடியாத, நிதிவசதி இல்லாத 12,959 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதி தலாரூ.1 இலட்சத்திலிருந்து, ரூ. 2 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மேலும், 5,041 திருக்கோயில்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. தற்போது ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 19,000 திருக்கோயில்களுக்கும் வைப்பு நிதி ரூ.2.50 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்காக மட்டும் இதுவரை ரூ. 335 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

ஒருகால பூசை திட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஊக்கத் தொகை ரூ.1,500/–ஆக உயர்த்தப்பட்டு 19,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக 1,500 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

19,000 ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூசை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடுதல்

திருக்கோயில்களின் தலவரலாறு, தலபுராணம், கட்டடக்கலை, கல்வெட்டுகள் குறித்த 516 தொன்மையான அரிய நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டு; மேலும் 300 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி மற்றும் பெண் ஓதுவார்கள் நியமனம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உன்னத திட்டமாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்படி, 29 பேர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பணி நியமனம் செய்யப்பட்ட 46 ஓதுவார்களில் 12 ஓதுவார்கள் பெண்கள் ஆகும்.

நாள் முழுவதும் பிரசாதம்

இவ்வரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 30 திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு

தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2024 ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

யுனெஸ்கோ விருது

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு மரபு சார்ந்த கட்டடக் கலையினைப் பாதுகாக்கும் பொருட்டு நவீன அறிவியல் உதவியுடன் பாரம்பரியம் மாறாமல் திருக்கோயிலைப் புனரமைத்தற்காக கலாச்சாரப் பாரம்பரிய யுனெஸ்கோ ஆசிய, பசிபிக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவருக்கு கற்கோயில்

அய்யன் திருவள்ளுவரைப் போற்றும் வகையில் மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணி ரூ.19.17 கோடியில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வருகிறது.

தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம்

நாகை மாவட்டம். வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினத்தில் அருள்மிகு ஒளவையார் திருக்கோயிலில் ரூ.18.95 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

அன்னைத் தமிழில் வழிபாடு

இவ்வரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்கள் உள்பட 294 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அன்னைத் தமிழில் வழிபாடு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 விழுக்காடு பங்குத் தொகையாக வழங்கப்படுகிறது. 14 போற்றி நூல்களை பதிப்பிக்கச் செய்து மேலும் வலு சேர்த்துள்ளது.

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலைகளை நிறுவுதல்

கோவை மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 110 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம், அடிப்படை வசதிகளுடன் அருங்கோண வடிவத்தில் அமைக்கப்படும் புல்வெளி நில அமைவிற்கு மத்தியில் புதியதாக 184 அடி உயர முருகன் சிலையும், ஈரோடு மாவட்டம், திண்டல், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதியதாக 180 அடி உயர முருகன் சிலையும், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குமரகிரி, திமிரி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.6.83 கோடி மதிப்பீட்டில் புதியதாக 114 அடி உயர முருகன் சிலையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூரில் கடல் அரிப்பைத் தடுக்கும் பணி

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடற்கரை பரப்பினை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் பொருட்டும், புனித நீராடும் பக்தர்களின் நலன் கருதியும், நீர்வளத்துறையின் கடல் அரிப்பு தடுப்பு பிரிவு மூலம், ரூ.15 கோடி அரசு நிதி மற்றும் ரூ.15 கோடி திருக்கோயில் நிதி ஆக மொத்தம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பணியாளர் நியமனங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி ஆணையர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர் உட்பட, 944 பேருக்கும், நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் 946 அலுவலர்களுக்கும், கருணை அடிப்படையில் 34 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,351 பணியாளர்கள் பணிவரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடைகள் மற்றும் சீருடைகள், ரூ.221 கோடி மதிப்பீட்டில் 616 குடியிருப்புகள், திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும் உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை, குடும்ப நலநிதி ரூ.4 இலட்சமாக உயர்வு, ஆண்டிற்கு ஒருமுறை முழு உடற் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

வள்ளலார் முப்பெரும் விழா & அனைத்துலக வள்ளலார் மாநாடு

ரூ. 3.25 கோடி அரசு நிதியில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு, ஓராண்டு காலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் 15.02.2026 அன்று சென்னை, கீழ்ப்பாக்கத்தில், அனைத்துலக வள்ளலார் மாநாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களுக்கு அரசு நிதி:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

SIR: Final voter list released – Is your name on it? How to find out?!

SIR: Is it still possible to apply to vote in the legislative assembly election? – 5 questions and answers