`தாலிக்கு தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அறுக்கிறார்கள்’ – சீமான் ஆவேசம்

`தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது?’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர் அறிமுகம்

ஊத்தங்கரையில் நடந்த நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர்களான மேகலா (ஊத்தங்கரை தனி), கவின் (பர்கூர்), சுகந்தி (கிருஷ்ணகிரி, நாகராஜ் (வேப்பனஹள்ளி), ஸ்டாலின் (ஓசூர்), நரசிம்மன் (தளி) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய சீமான், “சாதி, மதம், திரைக் கவர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. இன்றைய அரசியல், ஆட்சி நிர்வாகம் என்பது இலவசம் கொடுப்பவையாக உள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வந்தாலும் மக்களுக்கு எந்த மாறுதலும் வருவதில்லை.

நாம் முன்னெடுக்கும் அரசியலுக்கும் தி.மு.க முன்னெடுத்து வந்த அரசியலுக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. புதிய கோட்பாட்டை கொண்டுவரும்போது எதிர்ப்பார்கள் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சாராயப் பொருளாதாரத்தில் இருப்பவர்கள், நாம் பசுமை தற்சார்பு பொருளாதாரத்தில் இருப்போம். மனிதர்களின் உயிர்த்தேவையே உணவுதான். அதை அடிப்படையாக வைத்து கட்டமைப்பதுதான் நிலையான பொருளாதாரமாக இருக்கும்.

சீமான்

இந்தியாவிலேயே அதிகப்படியான விதவைகள் உள்ள மாநிலம் தமிழகம். தமிழக இளைஞர்களை மது, கஞ்சா போதைக்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என வாக்களித்த மக்கள் அனைவரும் போராடி போராடித்தான் எதையும் பெற வேண்டுமா?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார், இதில் என்ன பெருமை உள்ளது? இந்த போராட்டங்களை மக்களிடம் திணித்தது யார்? இது கொடுமை இல்லையா? பிள்ளையின் பசியறிந்து பால் கொடுக்கும் ஒரு தாயைப் போல மக்களின் தேவையறிந்து நிறைவேற்றுபவன்தான் உண்மையான தலைவன்.

மாறி மாறி ஆட்சி அமைத்தவர்கள் யாரேனும் சாராயக் கடைகளை மூடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்களா? தாலிக்குத் தங்கம் கொடுப்பதாக சொல்பவர்கள், குடிக்க வைத்து அந்த தாலியை அவர்களே அறுக்கிறார்கள். அப்படி தாலி அறுக்கிற கூட்டத்துக்குத்தான் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரத்தை கொடுக்கிறார்கள்.

இன்று குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகிறார்கள். ஒரு குற்றச் சமூகமாக இந்த நாடு மாறி வருகிறது.

யார் இந்த மண்ணை பேரன்பு கொண்டு காதலிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே இதை சரி செய்ய முடியும். அதனால்தான் நாங்கள் எத்தனை முறை தோற்றாலும் அவர்களுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திக்கிறோம். தோல்வி என்பது வெற்றியின் தாய், வெற்றியை துரத்திக் கொண்டிருக்கிறோம்.

கிருஷ்ணகிரி மாவட்ட வேட்பாளர் அறிமுகம்

யாருடைய அரசியல் இந்த நாட்டுக்கு தேவை என்பதை முடிவு செய்யுங்கள். ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் தருவோம், மூவாயிரம் தருவோம், மிக்சி, கிரைண்டர், சிலிண்டர் தருவதாகக் கூறுகிறீர்கள், உங்கள் பரம்பரை சொத்தை விற்றா கொடுக்கிறீர்கள்? இந்த பணம் எங்கிருந்து எடுக்கப்படுகிறது? இதற்கு பதில் யாரிடம் உள்ளது?

இலவசம் கொடுப்பதுதான் நல்ல நிர்வாகமா? நல்ல ஆட்சி முறையா? நாட்டின் பட்ஜெட் மூன்று லட்சம் கோடி, இதில் வட்டி மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

கடன் வாங்கியவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒரு வீடே நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலையில் ஒரு நாடு எப்படி நிம்மதியாக வாழ முடியும்? இதை அறிவார்ந்த சமுதாயம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள்.

மலை வளத்தை அழிப்பது, ஆற்று மணல் அள்ளுவது தமிழகத்தில் பெரிய பிரச்னையாக உள்ளது. தற்போது ஆற்றில் போதிய மணல் கிடைக்காததால் மலையை வெட்ட ஆரம்பித்து விட்டார்கள். மரம் வெட்டினால் வேறு மரம் வைத்து விடலாம், மலையை வெட்டினால் வேறு மலையை வைக்க முடியுமா?

திருப்பரங்குன்றம் மலைக்கு போராடுகிறவர்கள், அருகில் அழிகின்ற மலைக்கு கவலைப்படுவதில்லை. அன்றைய காலத்தில் பசிக்கு வேட்டையாடினார்கள், இன்று பண வேட்டையாடுகிறார்கள்… வருகின்ற தேர்தலில் இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

The first actor to go to the Tamil Nadu Legislative Assembly before M.G.R; do you know who it is?

Upset, anger, bad luck… Who benefits in the National Democratic Alliance? Who suffers losses?