தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்க நெருங்க, பிரசாரக் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக வாக்காளர்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பேர் இளம் வாக்காளர்கள் (20–21 வயது). அதிலும் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை (18–19 வயது) மட்டும் 12.51 லட்சம், அதாவது 2.2 சதவிகிதம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும், இளைஞர்கள் பலரின் கவனத்தையும் அரசியல் பக்கம் திருப்பியிருக்கிறது. இந்நிலையில், Gen Z இளைஞர்களின் வாக்குகள் தமிழ்நாடு அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
Gen Z முதல் முறை வாக்காளர்களின் அரசியல் ஆதரவை தீர்மானிப்பதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகம். பரபரப்பாக நடைபெறும் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., த.வெ.க. போன்ற கட்சிகளின் பிரசாரம் இன்றைய தலைமுறையினரிடம் எவ்வகை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ளும் முயற்சியாக, Gen Z வாக்காளர்கள் சிலரிடம் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்டோம்.

அதில், இளைஞர்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் சற்று அதிகமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.
மாணவர் 1,
“த.வெ.க தலைவர் விஜய்யின் அரசியல் கவரும் வகையில் இருக்கிறது. அவரின் ரசிகர்களுக்காக அவர் நிற்கிறார். அவரின் புதிய பிரசாரங்கள் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையைத் தருகிறது.” என்கிறார்.

மாணவர் 2,
“விஜய்யின் பேச்சு தெளிவாக இருக்கிறது. தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றம் தேவை. சமூக வலைதளங்களைத் திறந்தாலே அவரின் பேச்சுகள்தான் தெரிகிறது. மாற்று அரசியலுக்காக விஜய்க்கு ஒரு வாய்ப்பு அளிப்பதில் தவறில்லை. மக்களின் கவனத்தை எப்படி ஈர்க்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். ஆளுங்கட்சியின் குறைகளைப் பேசி அவர் வாக்கு சேகரிப்பது கவரும் வகையில் இருக்கிறது.” என்கிறார்.

மாணவர் 3,
“த.வெ.க-வின் அரசியல் எளிமையாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் இருக்கிறது. பாரம்பர்ய அரசியலாக இல்லாமல் புதுமையாக இருக்கிறது. காலம் காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியைப் பார்த்துவிட்டோம். இது மாற்றத்திற்கான நேரம். புதிதாக வந்திருக்கும் விஜய்க்கு வாய்ப்பளிக்கலாம். மேலும் இளைஞர்களை அவர் எளிதாக கவர்ந்து விடுகிறார். மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றம் என்று தேவைகளைப் பேசுகிறார். இந்த அரசியலே தற்போது தேவை. இதுவே முன்னேற்றம் தரும்.” என்கிறார்.
பெரும்பாலான இளைஞர்கள் விஜய்யின் அரசியலால் கவரப்பட்டிருந்தாலும், சிலருக்கு த.வெ.க., மீது அதிருப்தியும் காணப்படுகிறது. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சியின் மாற்று அரசியலும் இளைஞர்களை ஈர்க்கிறது.

மாணவர் 4,
“தி.மு.க செய்த தவறுகளைப் பார்த்துவிட்டோம். த.வெ.க-வும் நம்பிக்கை தரும் வகையில் இல்லை. நா.த.க மட்டுமே தெளிவான, மக்களுக்கான கொள்கைகளைக் கொண்டுள்ளது. மற்ற கட்சிகளைப் போல இலவசம் தருகிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி சோம்பேறிகள் ஆக்காமல், வேலைவாய்ப்பு அளித்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம் என்கிறார் சீமான். அதுவே சரியான முன்னேற்றம்.”

மாணவர் 5,
“மண், மக்கள், இயற்கை என்று இயற்கை சார்ந்த அரசியலை நா.த.க முன்னெடுத்துள்ளது. இது தமிழகத்திற்கு புதிது மட்டும் அல்லாமல், இன்றைக்கு மிகவும் தேவையானது. மாற்று அரசியல்தான் தமிழகத்தின் தேவை. அதை நா.த.க மட்டுமே பேசுகிறது. இயற்கையைக் காப்பதே மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.”
மாணவர் 6,
“மற்ற கட்சிகள் பாலின சமத்துவத்தை பெயரளவிலேயே பேசுகின்றன. நா.த.க மட்டுமே 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சமத்துவத்தை வாயளவில் பேசாமல் செயலில் காட்டுகிறது. இயற்கையைக் காப்பது, வேலைவாய்ப்பு என தெளிவான கோட்பாடுகளைக் கொண்டுள்ளது.”
சில மாணவர்களின் ஆதரவு திராவிடக் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் த.வெ.க மற்றும் நா.த.க-வுடன் ஒப்பிடுகையில் அதன் அளவு குறைவாக உள்ளது.
மாணவர் 7,
“தி.மு.க-வுக்கு அரசியலில் அனுபவம் அதிகம். அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் பெண்கள், திருநர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் அவர்களின் வளர்ச்சித் திட்டங்களும் நன்றாக இருந்தன. தேர்தலுக்கான அவர்களின் விளம்பரங்களும் கவர்கின்றன.”

மாணவர் 8,
“தி.மு.க இன்னும் பெண்கள் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்படலாம். சில குறைகள் இருந்தன. ஆனால் தொடர்ந்து ஆட்சி செய்தால் பெண்கள் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்கள் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். பா.ஜ.க-வை என்னால் ஆதரிக்க முடியாது. தமிழர்கள் சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் சமத்துவமாக வாழ வேண்டும்.”
சில மாணவர்கள் அ.தி.மு.க-க்கும் இன்னொரு வாய்ப்பு அளிக்கலாம் என்ற கருத்தையும் வெளியிடுகின்றனர்.
மொத்தத்தில், இளைஞர்களில் பலருக்கும் அரசியலில் மாற்றம் தேவை என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. பாரம்பர்ய அரசியல் முறைகளை விட, புதிய அணுகுமுறையுடன் வரும் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கவே அவர்கள் விரும்புகின்றனர். அதே நேரத்தில், திராவிட அரசியலின் வரலாறு மற்றும் நலத்திட்டங்கள் காரணமாக சிலர் அதற்கும் ஆதரவு அளிக்கின்றனர்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.