கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து கிருஷ்ணகிரியிலுள்ள தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ஆசிரியை மார்கரெட் விமலி சமர்பித்த மதிப்பீட்டு சான்றிதழ் தவறானது எனக்கூறி 2012 -ஆம் ஆண்டு இடை நீக்கம் செய்ததுடன், அதுவரை அவர் பெற்ற சம்பளம் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியை மார்கரெட் விமலி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளூபடி செய்தார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘மனுதாரர் பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் அவரது சான்றிதழ்களை சரி பார்த்து இருக்க வேண்டும். அப்படியின்றி 12 ஆண்டுகள் கழித்து பணியிடை நீக்கம் செய்தது தவறானது’ என்று தெரிவித்து, பணியிடை நீக்கத்தையும் குற்றவியல் நடவடிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு இதே காரணங்களுக்காக தணிக்கையில் ஆட்சேபம் இருப்பதாகக் கூறி, ஆசிரியை மார்கரெட் விமலி கடந்த 25 ஆண்டுகளாக பெற்ற சம்பளம் ரூ. 74 லட்சத்தை திருப்பி செலுத்தும்படி கிருஷ்ணகிரி வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மார்கரெட் விமலி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர, நீதிபதி தண்டபாணி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித்துறை தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி,
‘இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அதே காரணத்தைக் கூறி, வழங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் எனக் கோர முடியாது. எனவே மனுதாரரிடமிருந்து ரூ 74 லட்சத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் அவருக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 12 மாத சம்பளத்தை 12 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.
பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.