பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மேலும் ஒரு புதிய கட்சியை தொடங்கியுள்ளார் வழக்கறிஞர் வா.புகழேந்தி.

திமுக-விலிருந்து பிரிந்து எம்ஜிஆர், அதிமுகவைத் தொடங்கி ஆட்சியை பிடித்தது வரலாறு. அதன்பின் அக்கட்சி நிர்வாகிகள் கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது புதிய கட்சிகளை தொடஙகுவது வழக்கமானதாக இருந்தாலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் டிடிவி தினகரன், திவாகரன், பாஸ்கரன், ஜெ.தீபா என ஒவ்வொருவரும் புதிய கட்சியினைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
அந்த வரிசையில் சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலாவும் புதிய கட்சிகளை தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துவிட, அவர் உருவாக்கிய அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவில் சில காலம் பயணித்து, அதிமுகவின் கர்நாடக மாநிலச் செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்த வழக்கறிஞர் வா.புகழேந்தி ‘புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கவனித்து வந்த புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா அணியில் இருந்தார். பின்பு தினகரனின் அமமுகவில் பயணித்தார். அங்கிருந்து முரண்பட்டு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றார். அதன் பின்பு ஓபிஎஸ் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவை தொடங்கியபோது அதில் பயணித்தவர், அதிமுக கட்சிக்கொடி, இரட்டை இலைச்சின்னத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான் புதுக்கட்சியை தொடஙகியுள்ளார். சமீபத்தில் மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெரியார் படம் அகற்றப்பட்டதை கடுமையாக விமர்சித்த புகழேந்தி, ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததையும் விமர்சித்தார்.
அதனால், தற்போது கட்சி தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணியை எதிர்த்து தவெக-வுக்கு ஆதரவளிப்பார் என்ற சொல்லப்படுகிறது.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.